shankar

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், அடுத்ததாக நடிகர் ராம்சரணை நாயகனாக வைத்து படம் இயக்கவுள்ளார். தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்பராஜ் எழுத, தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு கதாநாயகியை இறுதிசெய்யும் முயற்சியில் படக்குழு உள்ளது.

Advertisment

தற்போது இப்படத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், கார்த்திக் சுப்பராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய செல்லமுத்து என்பவர் ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் கதை தன்னுடையது என்று கூறி எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதையடுத்து, ஷங்கர் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இருவரிடமும் விளக்கம் கேட்டு எழுத்தாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இயக்குநர் ஷங்கர் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது நேரில் ஆஜராகியோ விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment