’காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் செல்வராகவன். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன. அதன்பிறகு அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது.
தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்ற தகவல் நீண்ட நாட்களாக வலம்வந்த நிலையில், ஒரு விழா மேடையில் இயக்குனர் செல்வராகவன் இதனை உறுதிப்படுத்தினார். அதனையடுத்து, இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமானது.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டதாகத் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'என்னுடைய உலகத்திற்குத் திரும்பியுள்ளேன்' எனப் பதிவிட்டுள்ள செல்வராகவன், இது தன்னுடைய 12-ஆவது படமென்று குறிப்பிட்டு நடிகர் தனுஷ், தாயரிப்பாளர் தாணு, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா என நால்வரையும் டேக் செய்துள்ளார்.
இதனையடுத்து உற்சாகமான ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.