Skip to main content

"மனிதனுக்கு இந்த உணர்வு இருக்கும்வரை திரையரங்குகள் அழியாது" - இயக்குனர் சீனு ராமசாமி பேட்டி...

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

director seenu ramasamy about impact of ott on theaters

 

 

இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் ராஜ்ஜியம் உலகம் முழுவதும் கொடிகட்டிப் பறந்துவருகிறது. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல ஸ்ட்ரீமிங் தளங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஓ.டி.டி. வருகையால் திரையரங்குகள் அழிவைச் சந்திக்கலாம் என்ற கருத்தும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், திரையரங்குகள் மற்றும் சினிமா துறையின் மீது ஓ.டி.டி யின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறியது... 

 

ஓ.டி.டி வருகையால் திரையரங்குகள் பாதிக்கப்படுமா என்று கேட்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை ஓ.டி.டி வரவால் திரையரங்குகள் வளர்ச்சிதான் பெறும், பாதிப்படையாது. எப்படி தொலைக்காட்சி வரும்போது சினிமா அழியும், அழியும் என்று சொன்னார்கள். ஆனால் அதில் செய்யப்பட்ட விளம்பரங்களால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது அதிகரித்தது. அதேபோலத்தான் இப்போதும் திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்கள். திரையரங்குகள் எப்போதும் மாற்றமடையாது. சினிமாவில் எத்தனையோ தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல கதைசொல்லும் முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் இதிகாசங்கள், புராணங்கள் வைத்து படங்கள், பின்னர் வசன சினிமா அதன்பின் காட்சிபூர்வமான சினிமா, இப்படி மௌன படத்தில் தொடக்கி இன்று கதை சொல்லும் விதங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

 

எது மாறினாலும் மனிதனுக்கும் திரைக்குமான உறவு இன்னும் மாறவில்லை. காரணம், மனிதனின் அடிப்படை உணர்ச்சியே ஒன்றுகூடுதல் தான். கொண்டாட்டத்திற்கும், தூக்கத்திற்கும், போராட்டத்திற்கும் ஒன்று கூடுவதும் எனும் மனிதனின் அடிப்படை உணர்ச்சியே இதற்கான அடிப்படை காரணம். ஒன்றுகூடும் உணர்வின் வெளிப்பாடு, திரையரங்கம் கொடுத்த அனுபவம் ஆகியவை திரையரங்கை வாழவைக்கும். இதுதான் திரையரங்கின் உயிர்மூச்சு. ஒன்றுகூடுதல் உணர்வு மனிதர்களுக்கு இருக்கும் வரைக்கும், திருமணத்திற்கும், துக்க நிகழ்ச்சிக்கு ஒன்றுகூடும் மக்கள் இருக்கும் வரைக்கும் திரையரங்குகள் வாழும்.

 

அப்படியென்றால் ஓ.டி.டி என ஆகும்..? திரையரங்கம் சென்றுசேர முடியாத படங்கள் ஓ.டி.டி யில் வந்துசேரும். எல்லாவிதமான படங்களுக்கும், படைப்பாளிகளுக்கும் தன்னம்பிக்கை தரக்கூடிய இடமாக ஓ.டி.டி இருக்கும். இதனால், திரையரங்கங்கள் வீழ்ச்சி அடையாது. திரையரங்குகள் அழிந்துபோகாது. மனிதனின் ஒன்றுகூடுதல் உணர்வின் வெளிப்பாடுதான் திரையரங்கம். மக்கள் திரையரங்குகளை மிஸ் செய்ய மாட்டார்கள். திரையரங்கம் வந்துசேர முடியாத படங்கள் ஓ.டி.டியில் கவனம்பெறும், உலகப்புகழ்பெறும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தேரு போல அசஞ்சு வந்தவளே...’ - குத்தாட்டம் போடும் ஜி.வி. பிரகாஷ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Idimuzhakkam first single released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் என ஏகப்பட்ட படங்களில் பணியாற்றுகிறார். 

இதில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் உருவாகி வருகிறது. கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தில் காயத்ரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் நடந்த பூனே சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக  ‘அடி தேனி சந்தையில்...’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இப்பாடலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வரதன் எழுதியுள்ள இப்பாடலை அந்தோனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். திருவிழாவில் நடக்கும் குத்து பாடலாக இப்பாடல் அமைந்துள்ள நிலையில், பாடலுக்கேற்ற குத்தாட்டம் போட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

Next Story

நடிகர் அவதாரமெடுக்கும் இயக்குநர் சீனுராமசாமி; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 Director Seenuramasamy, who plays the actor; first Look Poster Release

 

தமிழ் சினிமாவில் கூடல்நகர் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற படங்கள் இயக்கியதன் மூலமாக அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்தவர். இவருடைய இடம் பொருள் ஏவல், இடி முழக்கம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

 

இவரது இயக்கத்தில் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் நூலகராக ஒரு காட்சியில் மட்டும் இடம்பெறுவார். தற்போது புதுமுக இயக்குநர் விஜய் கார்த்திக் இயக்கும் "ஈகுவாலிட்டி” என்ற திரைப்படத்தில் முழுவதுமாக நடித்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் சீனுராமசாமி தன்னுடைய வலைதள பக்கத்தில் “குறை நிறைகளோடு என் படைப்புகளை ஆதரித்து அங்கீகரித்த தமிழ் சமூகம் எனை நடிகனாகவும் ஏற்று கொள்ளும் என்ற நம்பிக்கையில் நான் நடித்த திரைப்படத்தின் முதல் பார்வையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்” என்று போஸ்டரை வெளியிட்டுள்ளார்.