
'இங்கிலீஷ்காரன்', 'மகாநடிகன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் சமீபத்தில் 'சார்லி சாப்ளின் 2' என்னும் படத்தை இயக்கினார். தற்போது யோகிபாபுவை நாயகனாக வைத்து 'பேய்மாமா' படத்தை இயக்கியுள்ளார்.
இவர் அ.தி.மு.க.-வில் தலைமைக் கழக நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். அந்தக் கட்சிக்கு ஆதரவாகத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் பா.ஜ.க.வின் முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகின. இதன்பின் இயக்குனர் சக்தி பா.ஜ.க.வில் இணைந்துவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவியது.
இதனை அடுத்து சக்தி சிமத்பரம் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியானது எனக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது; இந்தத் தகவல் முற்றிலும் தவறானது. நான் 'பேய்மாமா' படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் சில மாதங்கள் தங்கியிருந்த காரணத்தால் இந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.
கரோனா அச்சுறுத்தலால் எனது மறுப்பு அறிக்கையை வெளியிடவும் தாமதமானது. நான் எம்.ஜி.ஆர். அவர்களின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களின் கரங்களால் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் அட்டை பெற்றவன். தற்போது முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, எனது உயிர் மூச்சு இருக்கும் வரை அ.தி.மு.க. தொண்டனாகவே பணியாற்றுவேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.