Skip to main content

"யாரும் பசியோடு போகக்கூடாது" - விஜயகாந்த் செயல் குறித்து நெகிழ்ந்த 'சின்னக் கவுண்டர்' இயக்குநர் 

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

 RV Udhayakumar

 

சூர்யா ஃபிலிம்ஸ் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் பியோஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிட்தி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், "தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மாதிரி சாப்பாடு போட்ட நடிகர் உலகத்தில் யாருமே கிடையாது. சின்ன கவுண்டர் படத்திற்கு முன்பாக ஊமை விழிகள் படத்திலிருந்தே விஜயகாந்த்துடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. உழவன் மகன் படப்பிடிப்பு சமயத்தில் கோனார் மெஸ்ஸுக்கு கையோடு என்னை தூக்கிக்கொண்டு போவார் விஜயகாந்த். 'இந்த எலும்ப நல்லா சாப்பிடு, ஆள் ரொம்ப ஒல்லியா இருக்க, இதை சாப்பிடு அதை சாப்பிடு' என்று எனக்கு ஊட்டிவிடுவார். யார் பசியோடு வந்தாலும் அவர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக பின்புறம் டைனிங் டேபிளை கட்டிவைத்த ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டும்தான். 

 

கொரோனா காலத்தில் சங்க உறுப்பினர்களுக்கு கேட்டவுடன் உதவி செய்த ரஜினி சாரை மறக்கக்கூடாது, கேட்காமலே உதவி செய்த அஜித் சாரையும் மறக்கக்கூடாது. தன்னுடைய படம் தோல்வியடைகிறது என்றால் உடனே அந்தத் தயாரிப்பாளருக்கு மீண்டும் படம் கொடுக்கக்கூடியவர் அஜித். அப்படி கொடுத்து கொடுத்து முடியாமல் ஒருகட்டத்தில் விட்டுவிட்டார். இன்றைக்கு உள்ள ஹீரோக்கள் சம்பளம் வாங்கிய உடனேயே முதலீடு செய்துவிடுகிறார்கள். அதனால்தான் படம் தோல்வியடைந்தால் அவர்களால் தயாரிப்பாளருக்கு உதவ முடிவதில்லை. 

 

சிவாஜி சார் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது 'அவரிடம் சென்று ஏதாவது பேசுடா' என்று பிரபு என்னிடம் சொன்னார். 'முடிந்தால் ஏதாவது கதை சொல்லு' என்றார். நான் அவர் படுக்கையறைக்கு சென்று அவருக்கு கால் அழுத்திவிட்டேன். 'அப்பா உங்களுக்கு எல்லாம் சரியாகிரும், நான் உங்களுக்கு ஒரு கதை பண்ணிருக்கேன் கேட்குறீங்களா' என்றேன். 'சரி சொல்லு' என்றார். அதற்கு முந்தைய நாள் ஒரு ஆங்கில படம் பார்த்திருந்தேன். அந்தக் கதையை கொஞ்சம் மாற்றி அவரிடம் கூறினேன். அந்தக் கதை அவருக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. 

 

பின், 'என்னை கொஞ்சம் எழுந்து உட்கார வைடா' என்றார். நான் அவரை கட்டிலில் உட்காரவைத்தேன். 'இப்பலாம் எல்லோரும் இயற்கையான நடிப்பு, எதார்த்த நடிப்பு என்கிறார்கள். நான் ரொம்ப நடிச்சிட்டேன்டா. அந்த மாதிரி நான் நடிக்கட்டுமா' என்றார். தான் தொட முடியாத எல்லை இருக்கிறது என்பதை கடைசிவரை ஒரு கலைஞன் நம்பினான் என்றால் அது சிவாஜிதான். வளரவளர வெற்றிகள் கொடுக்க கொடுக்க பணிவும் அடக்கமும் நமக்குத் தேவை. அந்தக் குணத்தை சிவாஜி சாரிடம் கண்டு வியந்துவிட்டேன். 

 

எம்.ஜி.ஆர். எவ்வளவு பேருக்கு உதவி செய்கிறார், அதைவிட நான் அதிகமாக என்ன செய்ய முடியும் என்று நினைத்த நடிகர்கள் இருந்த துறை இந்த சினிமாத்துறை. ஆனால், இன்றைக்கு உள்ள நடிகர்கள் அவருக்கு ஈ.சி.ஆரில் பங்களா உள்ளது, எனக்கும் அங்கு ஒரு பங்களா இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்" எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.