
இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் செவன் ஹில்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன. மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா கவனித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்குகிறது.
இப்படம் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. இப்படம் ஜூலை 4ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் மிஷ்கின், மாரி செல்வராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டர். நிகழ்வில் இயக்குநர் ராம், படத்தின் பாடல்களுக்கு யுவன் இசையமைக்காதது குறித்து பேசினார். அவர் பேசியதாவது, “முதலில் யுவன் ரசிகர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன். ஏன்னா நிறைய கெட்ட வார்த்தைகளுடன் மெசேஜ்கள் வருது. இந்த படத்துக்கு யுவன் தான் இசையமைப்பாளரா இருந்தார். அதற்கான அட்வான்ஸும் கொடுத்தோம்.
திடீர்னு மதன் கார்கி படத்தில் ஜிங்கில்ஸ் மாதிரி பாடல்கள் நிறைய இருந்தால் நல்லாருக்கும் என்றார். அந்த ஐடியா ரொம்ப நல்லாயிருந்துச்சு. அப்போது யுவன் துபாயில் இருந்தார். நாங்களும் ரோட்டர்டாம் ஃபெஸ்டிவலுக்கு போகனும். அதுக்குள்ள பாட்டை முடிக்கனும். யுவனால் துபாயில் இருந்து பாட்டு பண்ண முடியல. என்னாலையும் அங்கு போக முடியல. அப்போது வந்தவர் தான் சந்தோஷ் தயாநிதி. கதைக்கு என்ன தேவையோ அதைப் பண்ணி கொடுத்தார். இருந்தாலும் யுவனை மிஸ் பன்றேன். எனக்கும் அவருக்கும் எந்த சண்டையும் இல்லை. யுவனுக்கு டைம் இல்லாததால் இந்த படத்தில் அவர் பாட்டு பண்ண முடியவில்லை. அதனால் கெட்ட வார்த்தை சொல்லி மெசேஜ் பண்ணாதீங்க” என்றார்.