Skip to main content

"பாலுமகேந்திரா என் படத்தைப் பார்த்துட்டு கேவலமான படம் என்றார்" - ராம்

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

தமிழ்த்திரையுலகின் தலைசிறந்த இயக்குனரான பாலுமகேந்திராவின் பிறந்தநாள் இன்று. அவர் மறைந்து ஆண்டுகளாகியும் அவரது படைப்புகளும் அவரிடம் கற்றறிந்து இன்று தமிழ் திரையுலகை கலக்கி வரும் அவரது சீடர்களும் அவரை என்றும் நினைவுபடுத்துகின்றனர். அவரிடம் பணியாற்றியவர்களில் ஒருவரான இயக்குனர் ராம், பாலுமகேந்திரா குறித்து பகிர்ந்த சில விஷயங்கள்... 
 

balumahendran


"மட்டக்கிளப்பிலிருந்து கிளம்பி புனேவுக்கு சென்று பரிபூரணமாக சினிமாவை கற்றுக்கொண்டவர் எங்களுடைய இயக்குனர் பாலுமகேந்திரா. எனக்கோ, பாலாவுக்கோ, வெற்றிமாறனுக்கோ, மீரா கதிரவனுக்கோ, சீனு ராமசாமிக்கோ மட்டுமில்ல எத்தனையோ இயக்குனர்களுக்கான ஃபிலிம் லாங்குவேஜை அவர்தான் உருவாக்கி இருக்கிறார். இதை நாங்க உறுதியா நம்புவோம். இன்னும் சொல்லப்போனால் இயக்குனர் மகேந்திரனுடைய முதல் படத்தினுடைய ஃபிலிம் லாங்குவேஜ் பாலுமகேந்திராவுடையது. இயக்குனர் மணிரத்னத்தின் முதல் சினிமா தொடங்கியது அவரிடம் இருந்து. சினிமா என்ற கலையை கலையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த ஒளிப்பதிவாளர், இயக்குனர், படத்தொகுப்பாளர் பாலு மகேந்திரா சார்தான். 
 

அவருடைய படங்கள் அனைத்திலும் இலக்கிய பரிச்சயம் இருந்தது. அவரை வந்து சந்திக்கும் அனைவரிடமும் அவர் கண்டிப்பாக சொல்வது புத்தகங்கள் வாசியுங்கள் என்பதுதான். வெற்றிமாறன் அவரிடம் துணை இயக்குனராக சேர்ந்தபோது எல்லாம் பெரிய சைஸ் புத்தகம் ஒன்றை வெற்றி கையில் கொடுத்து சினாப்ஸிஸ் எழுதிவரச் சொன்னார் என்று நினைக்கிறேன். ஆனால், எனக்கு அதுபோல ஒன்றும் நடக்கவில்லை. நான் அவரிடம் துணை இயக்குனர் வாய்ப்பு கேட்டு சென்றபோது, அவர் 'பக்கத்து தெருவில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இருக்கிறார். அவர்தான் தற்போது அடிக்கடி படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். நான் படம் பண்ண 3 வருடம் ஆகும்' என்று அனுப்பிவிட்டார். அதன்பின் அவரிடம் ஒரு படத்தின் திரைக்கதை விவாதத்திற்காகத்தான் சென்றேன். அந்தப் படத்திற்கு அவரை ஒளிப்பதிவாளராக இருக்கும்படி கேட்டேன். அதன்பின் என்னை அவருடைய துணை இயக்குனராக சேர்த்துக்கொண்டார். 
 

net ad


ஒரு படம் முடித்தபிறகு அவரிடம் அந்த படத்தை போட்டுக்காட்ட வேண்டும் என்று நினைப்பேன். 'கற்றது தமிழ்' படத்தை அவரிடம் முதலில் போட்டுக்காட்டியபோது ஆசிய சினிமாவில் முதல் ஐந்து இடத்தில் கண்டிப்பாக இது வரும் என்றார். 'தங்கமீன்கள்' படத்தை பார்த்து மிகவும் கேவலமான படம் என்றார். என்னுடைய 'தரமணி' படத்தை போட்டுக்காட்ட முடியவில்லை என்பதைவிட 'பேரன்பு' படத்தை போட்டுக்காட்ட முடியவில்லை என்றுதான் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யுவன் - மதன் கார்க்கி கூட்டணியில் வெளியாகும் காதல் பாடல்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Yezhu Kadal Yezhu Malai first single release update

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்திருந்தார்.

இப்படத்தின் முதல் பாடல் வருகின்ற காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ‘மறுபடி நீ...’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளதாகப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடல் காதல் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பிரியாணி, அஞ்சான், வை ராஜா வை, மாநாடு உள்ளிட்ட சில படங்களில் யுவன் இசையில் மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார்.  

Next Story

“பாய்ச்சலைத் தொடங்கியிருக்கிறது” - மாரி செல்வராஜ் மகிழ்ச்சி

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
mari selvaraj about ram Yezhu Kadal Yezhu Malai

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிட தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிற 53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில், கடந்த 30ஆம் தேதி 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட்டது. 

இதற்காக நெதர்லாந்து சென்று விழாவில் கலந்து கொண்டது படக்குழு. அப்போது கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என இயக்குநர் ராம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரோட்டர்டாம் விழாவில் படத்திற்கு பார்வையாளர்கள் பாராட்டு தெரிவிக்கும் வீடியோவை படக்குழுவினர் சேர்ந்த பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அந்த வகையில் அஞ்சலி பகிர்ந்த அந்த வீடியோவை, இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இயக்குநரின் அடுத்த படைப்பான ஏழு கடல் ஏழு மலை ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் அதிகமான பார்வையாளர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு தன் பாய்ச்சலை தொடங்கியிருக்கிறது” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ராமிடம் உதவி இயக்குநராக மாரி செல்வராஜ் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.