Skip to main content

"விஜய் ஒரு தமிழ் ஹீரோ; அதனால் தான் கார்னர் செய்கிறார்கள்" - பேரரசு காட்டம்

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

director perarasu speech about varisu theatre issue

 

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் 'வாரசுடு' என்ற தலைப்பில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் அதற்கு சிக்கல் ஏற்படும் வகையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், அந்த அறிக்கையில், "தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில்  சங்கராந்தி(பொங்கல்) மற்றும் தசரா(விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது. எனவே விநியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

ad

 

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சிலர் இந்த அறிக்கை தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் படத்திற்கு ஆதரவாக, "தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம்" எனக் கூறியுள்ளார். 

 

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த லிங்குசாமி மற்றும் பேரரசுவிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அப்போது லிங்குசாமி கூறுகையில், "இந்த காலம் சினிமாவின் பொற்காலம். பான் இந்தியா என்ற வார்த்தை இப்போது தான் புதிது. ஆனால், சினிமா தொடங்கிய காலகட்டத்திலிருந்தே தமிழில் இருந்து தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் படங்கள் வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது. ஓடிடி வந்த பிறகு எந்த நடிகர் என்று பாகுபாடு பார்க்காமல் தமிழில் எடுக்கப்பட்ட படங்களை மற்ற மாநிலத்தவர்களும் பார்க்கிறார்கள். இப்படி ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்த ஒரு பிரச்சனை வரவே கூடாது. இப்போது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையால் பிரச்சனை உருவாகினால் அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தும்.

 

அதாவது 'வாரிசு'க்கு முன், வாரிசுக்கு பின் என்று சொல்லக்கூடிய நிலைமை ஏற்படும். அந்த அளவுக்கு இது பெரிய விஷயமாக மாறும். இரண்டு மொழிகளிலும் சரியான தரமான ஆட்கள் இருக்கிறோம். அவர்கள் கலந்து பேசி சுமூகமான தீர்வு காணவேண்டும். தமிழ்நாட்டில் 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' உள்ளிட்ட படங்கள் பெரிதாக ஓடியது. நம் படங்கள் தெலுங்கில் பெரிதாக ஓடுகிறது. கலை என்பது மொழிகளைத் தாண்டி தான் இருக்கிறது. இந்தப் பிரச்சனையை யாரோ ஒருவர் குறுகிய எண்ணத்தோடு ஏற்படுத்தியிருந்தால் அந்த எண்ணத்தை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. எண்ணம் மாற்றப்படவில்லை என்றால் நான் சொன்னது போல மோசமான நிலைமைக்கு தள்ளப்படும்" என்றார். 

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், "இப்படத்தில் என்ன கொடுமைனா இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல பேர் தெலுங்கை சேர்ந்தவர்கள். ஹீரோ மட்டும் தான் தமிழ் ஹீரோ. அதை வைத்து தான் கார்னர் செய்கிறார்கள். ஆனால் நாம் இங்கு மற்ற மொழி படங்களை கொண்டாடுகிறோம். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எந்த பாகுபாடும் இல்லாமல் பெருந்தன்மையோடு நடந்து வருகிறோம். ஆனால், அவர்கள் தெலுங்கு படங்களுக்கு தான் பண்டிகை நாட்களில் முன்னுரிமை கொடுப்போம் எனக் கூறுவது நம்மை அவமானப்படுத்துவது போல் உள்ளது. தயாரிப்பாளர் யாராக இருந்தாலும் அவர் தயாரிப்பாளர். அவருக்கு பாதிப்பு என்று வரும் போது, அது தெலுங்கு தயாரிப்பாளராக இருந்தாலும் சரி. வாரிசு ஒரு தமிழ் படம். இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் குரல் கொடுக்காவிட்டால் கூட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளுக்குப் பொதுவாக இருக்கும் ஒரு அமைப்பு இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டும்.

 

இது வெறும் ரிலீஸ் என்று பார்க்க முடியாது. நாங்கள் எல்லா மொழி படங்களையும் ஒன்றாகவே பார்க்கிறோம். நீங்கள் ஏன் தமிழைப் பிரித்து பார்க்கிறீர்கள். இதனால் எங்கள் தமிழ் உணர்வைத் தூண்டுகிறீர்கள். நாம் தான் திராவிடம் திராவிடம் எனச் சொல்லிக்கொண்டு வருகிறோம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் மக்களை சகோதரர்களாகப் பார்க்கிறோம். ஆனால், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் திராவிடம் என்ற வார்த்தை இல்லை. அதனால் அவரகள் தமிழர்களை திராவிடர்கள் எனப் பார்ப்பதில்லை. தமிழர்களை தமிழர்களாகத்தான் பார்க்கிறார்கள். இதற்கான ஒரு உதாரணம் தான் இந்த வாரிசு படப் பிரச்சனை. இந்தப் பிரச்சனையை சாதாரணமாக நாம் கடந்து போய்விட முடியாது. இது எங்களுக்கு மானப்பிரச்னை." எனக் காட்டமாகப் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.