இயக்குநர் தா.சே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'ஜெய் பீம்' படத்தில் நடித்துள்ளார். இதில், ரஜிஷா விஜயன், லியோ மோல் ஜோஸ், மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2டி என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார்.
இந்நிலையில், 'ஜெய் பீம்' படம் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. படத்தைப் பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இயக்குநர் பா. ரஞ்சித் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சாதி எதிர்ப்பையும், சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே - இதோ மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதைபோல இனி பல கதைகள் வரும். அது நம் தலைமுறையை மாற்றும். 'ஜெய் பீம்' படத்தைக் கொடுத்த படக்குழுவிற்கு பெரும் நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.