Skip to main content

“ராம் சொன்னதை கேட்டு பயங்கரமாக கண்ணீரே வந்துவிட்டது”- இயக்குனர் மிஷ்கின் சிறப்பு பேட்டி! 

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

துப்பறிவாளன் படத்திற்கு பின் இரண்டு வருடங்கள் கழித்து மிஷ்கின் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குனர் ராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். முதலில் இந்த படத்திற்கு பி.சி.ராம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார் பின்னர் அவர் விலகிக்கொள்ள அவருடைய உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். 
 

myskin

 

 

இந்நிலையில் இந்த படம் தொடர்பாக இயக்குனர் மிஷ்கின் நமக்கு அளித்த பேட்டியின்போது சைக்கோ படம் குறித்தும், அவரது தனிப்பட்ட சமூக பார்வை குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது, அவருக்கும் இயக்குனர் ராமுக்குமான நட்பு எத்தகையது, அவரை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்விகேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த மிஷ்கின், “முதலாவது, ராம் மிகவும் நல்லவர். இரண்டாவது, நேர்மையான திரைப்பட கலைஞர். என்னை அண்ணா என மதிக்ககூடியவர் இயக்குனர் ராம். அன்று ஒரு நாள் இரவு எனக்கு தொலைபேசியின் மூலம் தொடர்புக்கொண்டு, அண்ணா உனக்கு நிறைய பிரச்சனைகள் போய்கொண்டு இருக்கிறது. நீங்கள் எப்போதுவேண்டுமானாலும் என்னை அழையுங்கள். நான் வந்து உங்களை அரவணைத்துக் கொள்கிறேன். நீங்கள் எதுவும் கோபப்படாதீர்கள் என்று சொன்னார். எனக்கு அதை கேட்டவுடன் பயங்கரமாக கண்ணீரே வந்துவிட்டது. என்னுடைய சொந்த தம்பி கூட அப்படி சொல்லவில்லை, அவர் அப்படி சொன்னவுடன் எனக்கு நெகிழ்வாகிவிட்டது. அவர் மிகவும் நல்லவர், அதனால்தான் அவரால் பேரன்பு போல ஒரு நல்ல படத்தை எடுக்க முடிந்தது. அவர் நல்ல மனிதர். என்னுடைய இரண்டு படங்களிலும் நடிக்கிறார்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமத்தை குறை கூற முடியுமா?’ - நீதிபதி அனிதா சுமந்த்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
chennai hc Justice Anita Sumanth questions Can we blame Varnashrama for caste atrocities

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.  

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். மேலும் சனாதனம் குறித்து திமுக எம்.பி ஆ. ராசாவும் பேசி வருகிறார். இவர்கள் எதன் அடிப்படியில் பதவியில் நீடிக்கிறார்கள் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது; இதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி  நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், “நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, கடந்த நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது; அப்படியிருக்க, சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமம் தான் காரணம் என பழி கூற முடியுமா? வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை; செய்யும் தொழிலின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. சனாதனம் என்பது அழிவற்ற நிலையான, ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. ஆனால் சனாதனம் பற்றி நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் தவறு” என்று கருத்து தெரிவித்தார். 

Next Story

அரசுப் பேருந்துகளில் புதிய வசதியைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Minister Udayanidhi started a new facility in government buses

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரக அலுவலகத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 புதிய பேருந்துகள் இயக்கத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (28.02.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பாரத ஸ்டேட் வங்கியுடன் (SBI) இணைந்து மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் (Electronic Ticketing Machine) மூலமாக மின்னணு பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமை தாங்கினார்.

இந்த திட்டத்தினால் பயணச்சீட்டு வழங்கும் வேகம் மற்றும் எளிதான பயன்பாட்டிற்காக, பேருந்துகளில் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நடத்துநர்கள் இதன் மூலம் பயணிகளிடம் ரொக்கப் பணம், ஏடிஎம் அட்டை, கடன் அட்டை மற்றும் யூபிஐ மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பயணச் சீட்டு வழங்குவார்கள். இதனால் பேருந்துகளில் பயணிகள் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லாமல் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நடைவாரியாகவும் மற்றும் நிலை (ஸ்டேஜ்) வாரியாகவும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் வசூல் விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ்,  இணை மேலாண் இயக்குநர் .க.குணசேகரன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், அரசு உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.