ஜே டி எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி, ஸ்ரீ காந்த் மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ப்ளாக்மெயில்’. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 1 அன்று வெளியாகவுள்ளது.
படம் குறித்து இயக்குநர் மு.மாறன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “மனிதகுல வரலாற்றில் ப்ளாக்மெயில் என்பது தவிர்க்க முடியாத, எழுதப்படாத நடைமுறை. சில நேரங்களில் இது நண்பர்களிடையே நகைச்சுவைக்காக செய்யப்படலாம். ஆனால், சில நேரங்களில் ஆழமான ரகசியங்கள் வெளிக்கொண்டு வரும் விதமாகவும், பல நேரங்களில் பிளாக்மெயில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைகிறது. ‘பிளாக்மெயில்’ படம் பல கதாபாத்திரங்களை சுற்றி நடக்கிறது. கதாநாயகன் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் கதை. நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் கொண்டிருக்கிறது. நிச்சயம் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இந்தப் படத்தை நீங்கள் பார்க்கலாம்” என்றார்.
படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “உதவி இயக்குநர்கள் மற்றும் நல்ல கதைகள் இயக்கும் இயக்குநர்களுக்கு நம்பிக்கை கொடுப்பவர் ஜிவி பிரகாஷ்குமார் என்பதை அவரின் முந்தைய படங்கள் சொல்லும். வித்தியாசமான கதை எனும்போது பலருக்கும் அவரின் பெயர்தான் முதலில் நினைவுக்கு வரும். அதுபோன்ற கதைகளை அவரும் மிஸ் செய்ய மாட்டார். அப்படித்தான் ஜிவி பிரகாஷ்குமார் இந்தக் கதையில் வந்தார். தேஜூ அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி மற்றும் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் கதை தொடங்கியதில் இருந்து முடியும் வரைக்கும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.