மௌனராகம், தளபதி, நாயகன், ரோஜா, பம்பாய், இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் என தமிழ் சினிமாவில் பல கிளாசிக் படத்தை இயக்கியுள்ளவர் மணிரத்னம். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானை தன்னுடைய ரோஜா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

maniratnam

காற்று வெளியிடை தோல்விக்கு பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா உள்ளிட்ட நடிகர், நடிகைகளை வைத்து ‘செக்கச்சிவந்த வானம்’ என்றொரு வெற்றிப் படத்தை கடந்த வருடம் கொடுத்தார் மணி ரத்னம்.

இந்நிலையில் மணிரதனத்தின் கனவான பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பது குறித்து தற்போது அவர் ஆலோசித்து வருகிறார் என்கிற தகவல்கள் வெளியாகின. இதற்கான நடிகர்-நடிகை தேர்வில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளார் என்று சொல்லப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் மணிரத்னத்துக்கு நேற்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த தகவல் பட உலகிலும், சமூக வலைத்தளத்திலும் பரவி ரசிகர்களும், திரையுலகினரும் நலம் விசாரித்த வண்ணம் இருந்தனர்.

மணிரத்னம் வயிற்றுக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், சிகிச்சை முடிந்து விரைவில் வீட்டுக்கு திரும்பி விடுவார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.