Skip to main content

“இது இந்திய சினிமாவிலேயே புதிதான விஷயம்...” இயக்குநர் சிம்பு தேவன் நெகிழ்ச்சி!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

Chimbu Deven

 

சிம்புதேவன் இயக்கத்தில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, பிரியா பவானி சங்கர், சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'கசட தபற' திரைப்படம், கடந்த மாதம் 27ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆந்தாலஜி வகையில் 6 கதைகள் கொண்ட இப்படத்தில் ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு படத்தொகுப்பாளர்கள் பணியாற்றினர். இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட இப்படத்தை வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்தனர். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

 

இந்த நிலையில், இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்து இயக்குநர் சிம்பு தேவன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தங்கள் அனைவரின் வாழ்த்துகளோடு 'கசட தபற' மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறது அதற்காக இப்படத்தின் இயக்குநராக நான் உங்கள் அனைவருக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். 'கசடதபற' படத்தை பார்த்து மகிழ்ந்து என்னையும் எங்கள் குழுவையும் தொடர்ந்து பாராட்டிய உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.

 

சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், ரேடியோ ஆகியவற்றின் மூலமாக என்னையும் எங்கள் குழுவையும் அன்புடன் தோள் தொட்டு பாராட்டிய மரியாதைக்குரிய ஊடக நண்பர்களுக்கும், விமர்சனம் செய்த நண்பர்களுக்கும் எனது நன்றிகள். தாங்கள் பாராட்டி அறிமுகப்படுத்தியதால்தான் இந்த வெற்றி எங்களுக்கு சாத்தியமானது. எங்களை மனம் திறந்து பாராட்டிய திரைத்துறை பிரபலங்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

 

எங்கள் படத்தை மகிழ்வுடன் வெளியிட்டு, மக்களிடம் கொண்டு போய் சேர்த்த சோனி லைவ்-க்கும் எனது நன்றிகள். மேலும், உலக அளவில் வெளியிட்ட ப்ளாக் டிக்கெட் சினிமாஸ், டென்ட் கொட்டா மற்றும் ஏபி என்டர்டெய்ன்ட்மென்ட் ஆகியோருக்கும் எனது நன்றிகள். என் பெரும் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய இப்படத்தின் நடிகர்கள், டெக்னீஷியன்கள், புரொடக்சன் டீம் அனைவருக்கும் எனது நன்றிகள். குறிப்பாக ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள் ஒன்றாக இணைந்தது இந்திய சினிமாவிலேயே புதிதான விஷயம்! ஆக இத்தனை பேரின் அன்பினாலும் பெருந்தன்மையினாலும்தான் கசடதபற உருவானது.

 

என் அன்பு நண்பர் திரு. வெங்கட் பிரபு இல்லாமல் இந்தப்படம் சாத்தியமில்லை. ஒரு இனிய இரவில் கதை கேட்டு, இதை நாமே பண்ணலாம் என்று ப்ளாக் டிக்கெட் கம்பெனியில் தொடங்கியது முதல் இன்றுவரை எல்லா தடைகளையும் தாண்டி அன்பிற்குரிய தயாரிப்பாளராக இந்த படத்தை சுமந்து வந்துள்ள நண்பர் திரு. வெங்கட் பிரபுவுக்கு என்றென்றும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள். அதேபோல் இப்படத்தை இணைந்து தயாரித்து இந்த நொடி வரை எங்களுக்கு உறுதுணையாக வழிநடத்தும் மரியாதைக்குரிய திரு. ரவீந்திரன் அவர்களுக்கும் எனது நன்றிகள். தாங்கள் அளித்த இந்த வெற்றி என்னை தொடர்ந்து உற்சாகத்தோடும். பொறுப்புணர்வோடும் பயணிக்க வைக்கும். அனைவருக்கும் மீண்டும் எனது மகிழ்வான நன்றிகள்" என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் அதே பாணியில் படமெடுக்கும் சிம்பு தேவன் - ஹீரோவாக பிரபல நகைச்சுவை நடிகர்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

simbu devan next with yogi babu

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து 'காண்டிராக்டர் நேசமணி' மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

 

ad

 

மேலும் ரஜினியின் 'ஜெயிலர்' படத்திலும், விஜய்யுடன் 'வாரிசு' படத்திலும் நடித்து வருகிறார். அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இது போக ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கும் ஒரு படத்திற்கு  கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி அதில் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் நகைச்சுவை கதையம்சம் கொண்ட சரித்திரப் படமாக இருக்கும் எனவும் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படம் போன்று இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

 

'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்பு சில காரணங்களால் படம் நின்று போனது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

'6 ஒளிப்பதிவாளர்கள்... 6 இசையமைப்பாளர்கள்...' சிம்புதேவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

Kasada Thapara

 

சிம்புதேவன் இயக்கத்தில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, பிரியா பவானி சங்கர், சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கசட தபற'. இப்படத்தை வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஆந்தாலஜி வகையில் 6 கதைகள் கொண்ட இப்படத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், படத்தொகுப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.

 

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. இந்தச் சூழலில் 'கசட தபற' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்த தயாரிப்பு தரப்பு, சில ஓடிடி நிறுவனங்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், சோனி லைவ் நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதிமுடிவு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து, 'கசட தபற' திரைப்படம் சோனி லைவ் தளத்தில் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.

 

இந்த நிலையில்,  'கசட தபற' படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 27ஆம் தேதி  'கசட தபற' திரைப்படம் நேரடியாக சோனி லைவ் தளத்தில் வெளியாகவுள்ளது.