Skip to main content

“இனி ஒருவர், இதுபோல உயிரிழக்கக்கூடாது”- இயக்குனர் சேரன் காட்டம்!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

cheran dir

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

 

கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், அரசின் விதிமுறைகளின்படி, குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இந்நிலையில் இந்தக் கொடூர சம்பவத்திற்கு இயக்குனர் சேரன் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், “காவல்துறை என்றாலே அடித்துச் சித்ரவதை செய்வதுதான் என்ற எண்ணத்தை உருவாக்கும் சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகள் போன்றோரின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக உயர் போலீஸ் அதிகாரிகள் கண்டிப்புக் குரல் எழுப்ப வேண்டும். இங்கே இறந்த இருவருக்கான நீதி என்பதைத் தாண்டி இனி ஒருவர் இதுபோல உயிரிழக்கக்கூடாது.

 

அதன் உதாரணமாக இந்தப் புகாரை நீதிபதிகள் விசாரித்துக் கொடுக்கும் கடும் தண்டனை மூலமாக நீதியும் சட்டமும் காப்பாற்றப்படவேண்டும். காவல்துறை மக்களைப் பாதுகாக்க அன்றி உயிரைப் பறிக்க அல்ல என்பதை முதலில் இதுபோன்ற காவலர்களுக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் மக்கள் காவல்துறையை நம்ப மறுப்பார்கள்.

 

மனித உரிமைக் கழகமும் மக்களும் இந்த அவமானச் செயலுக்குத் தகுந்த பாடம் புகட்ட தங்கள் எதிர்ப்புக் குரலை உயர்த்த வேண்டும். நீதியின் தீர்ப்பு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் தவறை நிரூபிக்கும் பட்சத்தில் அரசு அவர்களுக்கான கடுமையான தண்டனையை நிறைவேற்றி மக்களுக்கான அரசு என நம்பிக்கை தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“தவறு என நினைக்கும் எந்த ஒரு செயலுக்கும் சில நியாயங்கள் உண்டு” - சேரன் பாராட்டு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
cheran about koose munisamy veerappan series

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, மற்றும் வசந்த் பாலகிருஷ்ணன் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியான டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்திருந்தார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியிருந்தது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருந்தது. 

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டிருந்தது. சீசன் 2 வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர்.

இந்த சீரிஸ் வெளியான சில நாட்கள் கழித்து, ஜீ5 ஓடிடி தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. பின்பு சீரிஸீன் முதல் எபிசோடை இலவசமாக பார்க்கலாம் என சலுகை அறிவித்தது. அடுத்து யூட்யூபில் முதல் எபிசோடை மட்டும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து உலகளவில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளதாகவும் பின்பு 125 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டது. இப்போது 150 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளது. 

இந்த நிலையில் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன், ‘கூச முனுசாமி வீரப்பன்’ சீரிஸை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள, எக்ஸ் பதிவில், “மிக நேர்த்தியான படைப்பு. மனிதனுக்கான பல்வேறு முகங்களை பதிவு செய்திருக்கிறது. தவறு என நினைக்கும் எந்த ஒரு செயலுக்கும் சில நியாயங்கள் உண்டு. குறிப்பாக அதில் பெண்களின் உணர்வுகளை அவர்கள் சகிக்கமுடியாத வலிகளை கடந்தும் வாழ்க்கையை எதிர்கொண்டு நிற்கிற தன்மையை இயக்குநர், சம்பவத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட மனிதர்களின் முகங்களை பதிவு செய்தது என்னை ஈர்த்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புரட்சியாளர்கள் எப்படி அடக்குமுறைகளால் வீழ்த்தப்படுகிறார்கள் என்பதை அழகாக பதிவு செய்த இயக்குநருக்கு வாழ்த்துகள். இந்த வெப் டாக்யூ உருவாகக் காரணம் நக்கீரன் ஆசிரியர், தைரியமாக காட்டுக்குள் சென்று பதிவு செய்த வீடியோ. இந்தத் தொடர் உருவாக, ஒரு உண்மைக் காலம் தாண்டி இச்சமூகத்திற்கு செல்ல உதவியிருக்கிறது. அவருக்கும் பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார்.