இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடிக்கும் 'கள்ளன்' படத்தை பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியிருந்தார். பல்வேறு பிரச்சனைகளை கடந்து இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் கள்ளன் படத்தை திரையரங்குகளில் திரையிட விடாமல் சில சாதி அமைப்புகள் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கள்ளன் பட தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் சாதி அமைப்புகள் 'கள்ளன்' திரைப்படத்தை திரையிட விடாமல் தடுத்து வரும் செயலைக் கண்டித்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய படத்தின் இயக்குநர் சந்திரா தங்கராஜ், "நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் பெரியார் மண்ணில் சாதி அமைப்புகளின் ஆதிக்கம் தலை தூக்க விடாமல் முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். மேலும் கள்ளன் என்ற தமிழ் சொல் திருடர்களை தான் குறிக்கிறது. ஏற்கனவே திருடன், கள்வர் போன்ற பெயர்களில் படங்கள் உள்ளதால் கள்ளன் என்ற சொல்லை டைட்டிலாக வைத்ததாக அவர் தெளிவுபடுத்தினார்.
சாதி அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவர் என்னுடைய தொலைபேசி எண்ணை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். அவர்கள் பின்னிரவு நேரங்களில் போன் போட்டு ஆபாசமாகப் பேசுகிறார்கள்.இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருத்தர் ஆபாச படங்களை அனுப்பி இது போல் எனக்கும் பண்ண முடியுமா என்று கேட்கிறான்.கடந்த ஒரு மாதமாகவே இது போல் ஆபாச தாக்குதல் நடத்துகிறார்கள்.இதுதான் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கிற மரியாதை" எனக் கண்கலங்கி உள்ளார்.