Skip to main content

விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் கதையை படமாக்க முயற்சித்தேன்! - பாலாஜி சக்திவேல் பகிர்ந்த சர்ப்ரைஸ் தகவல் 

Published on 11/05/2019 | Edited on 25/08/2020


 

vijayakanth ibrahim rowther

 


சென்னை கவிக்கோ அரங்கில் 'தமிழ் சினிமாவில் முஸ்லீம்களின் வாழ்வியல் பதிவுகள்' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் முன்பு நடைபெற்றது. தமிழ் திரைப்படங்களில் இசுலாமியர்களின் வாழ்வியல் எந்த அளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அதில் நடந்த தவறுகள், சார்பு நிலைகள், போதிய அளவு இடம் பெறாததன் காரணம் என பல்வேறு விஷயங்கள் காரசாரமாக நடைபெற்றன. அந்நிகழ்வில் பேசிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் பலரும் அறியாத ஒரு சுவாரசிய தகவலைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதிலிருந்து...

 

"நான் சூரியன் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய போது ஷங்கர் இணை இயக்குனர். அப்போதிருந்தே நான் தனியாக படம் இயக்க எண்ணி ஒரு கதையை தயார் செய்திருந்தேன். அது விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் இருவருக்கும் இடையிலான நட்பை அடிப்படையாகக் கொண்ட கதை. சினிமாவிற்கு வந்த பிறகு அல்லாமல் அதற்கு முன்பே மதுரையில் அவர்கள் கொண்ட நட்பு, அவர்கள் வாழ்க்கை குறித்து மிக உண்மையாக கதை செய்திருந்தேன். அதில் விஜயகாந்தின் தந்தையாக சிவாஜி கணேசன், இப்ராஹிம் ராவுத்தர் பாத்திரத்தில் மம்மூட்டி என பெரிய நடிகர்களை மனதில் வைத்து அந்தக் கதையை உருவாக்கினேன். இந்தப் படத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகள் முயற்சி செய்தேன். அவரிடம் கதை சொல்ல நேரம் பெறுவதே கடினமாக இருந்தது. அவர் நடித்த 'சக்கரை தேவன்' படத்தில் நான் பணியாற்றினேன். ஒரு வழியாக அவரிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.

 

vijayakanth at ibrahim rowther's death


மிக இயல்பான அதே நேரம் படமாகினால் மிக முக்கியமான படமாக இருக்குமாறு அந்தக் கதையை உருவாக்கிய நான், அவரிடம் மிகுந்த உணர்ச்சிவசத்தோடு துடிப்போடு அந்தக் கதையை சொல்லி முடித்தேன். 'கதை நல்லாருக்கு, ராவுத்தர்கிட்டயும் சொல்லுங்க' என்று சாதாரணமாக சொன்னார் விஜயகாந்த். என் மனதில் இருந்த அந்த உணர்வு அவருக்கு ஏனோ செல்லவில்லை. அந்த ஆழம் அவரால் உணரப்படவில்லை என்பது புரிந்தது. ரவுத்தரிடமும் முயற்சி செய்தேன். ஆனால், அப்போது நான் சொன்ன நடிகர் பட்டியல், ஏ.ஆர்.ரஹ்மான் இசை போன்றவற்றை காரணமாகக்காட்டி அந்தப் படம் உடனே நிகழவில்லை. சிவாஜி அவர்களுக்கும் உடல்நிலை சரியில்லை. இப்படி, நான் நினைத்த நடிகர்கள் கிடைக்கவில்லை என்பதால் அந்தப் படத்தை நானே கைவிட்டேன். இந்தக் கதையை நான் லிங்குசாமியிடம் சொல்லியிருக்கிறேன். கேட்ட அவர் உண்மையில் மிரண்டுவிட்டார். 'என்னங்க இது விறுவிறுப்பாகவும் இருக்கு, அதே நேரம் ஒரு வாழ்வியலையும் சிறப்பாக சொல்லியிருக்கு' என்று கூறிப் பாராட்டினார்.

 

நான் வளர்ந்ததே அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான். திண்டுக்கல்லில் ஒரு ஸ்டோர் வீட்டில் பொது தண்ணீர் பொது கழிப்பறை என்று மதம் தாண்டித்தான் நாங்கள் வாழ்ந்தோம். வகுப்பில் என் நெருங்கிய நண்பர்கள் இசுலாமியர்கள்தான். அதனால்தான் அப்படியொரு கதையை என்னால் எழுத முடிந்தது. இப்போதும் கதை இருக்கிறது. ஆனால், எடுக்க முடியவில்லை என்பது வருத்தம்தான்."



 

balaji sakthivel



விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் இடையிலான நட்பு புகழ்பெற்றது. விஜயகாந்தின் வாழ்விலும் வளர்ச்சியிலும் ராவுத்தரின் பங்கு முக்கியமானது. சினிமாவில் தான் வாய்ப்பு தேடும்போது ராவுத்தர் தனக்கு உறுதுணையாக இருந்து செய்த சேவைகளையும் உதவிகளையும் பல தருணங்களில் நெகிழ்ந்து கூறியுள்ளார் விஜயகாந்த். வல்லரசு உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர்களது நட்பு வசனமாகவும் வைக்கப்பட்டுள்ளது. நண்பர் ராவுத்தரை ஒரு தயாரிப்பாளராக்கி மகிழ்ந்தார் விஜயகாந்த். பின்னர் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் பிரிந்தனர். அரசியலில் விஜயகாந்த் இறங்கிய பின்னர் இடைவெளி இன்னும் அதிகமானது. ராவுத்தர் மறைந்தபோது கண்ணீர் சிந்தி அழுதார் விஜயகாந்த். இந்த நட்பு படமாகியிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். 
        

  

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு மட்டுமே  சொந்தம்” - சீமான் பேச்சுக்கு விஜயகாந்த் மகன் பதிலடி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Vijayakanth son of Seaman said that Murasu symbol belongs only to dmdk

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில் தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வருகை தந்தார். அப்போது வத்தலகுண்டு காளியம்மன் கோவில், புதுப்பட்டி, விராலிப்பட்டி, குன்னூத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்த விஜய பிரபாகரன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய விஜய பிரபாகரன் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசும்போது, “திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற மூன்றாவது கட்சி தேமுதிக மட்டுமே. பத்தாண்டுகள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவின் சொத்தாக உள்ளது. அண்ணன் சீமான் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவுக்கு இல்லை என்றது போல் தவறான பரப்புரைகளில் ஈடுபட்டு, தேமுதிக தொண்டர்களையும் பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது.

மேலும் ஹீரோக்களை நம்பி வாக்களிப்பது, ஜாதியை பார்த்து வாக்களிப்பது என்பது இருந்துவிடக் கூடாது. தமிழ் மக்களின் நலன் காப்பவர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார். இந்த விழாவில் நகரம், ஒன்றியம், மாவட்ட பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Next Story

சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் விஜயகாந்த் பெயரில் விருது!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Award in the name of Vijayakanth at the International Norway Tamil Film Festival!

15 வது சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழா மற்றும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சி மற்றும் ‘வீரத்தின் மகன்’ திரைப்பட திரையிடல் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.சி.குகுநாதன், நடிகர் போஸ் வெங்கட், இயக்குநர் கெளரவ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், பி.ஆர்.ஓ சங்க முன்னாள் செயலாளர் பெரு துளசி பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

நார்வே தமிழ்த் திரைப்பட விழாவின் இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் பேசுகையில், “ஆஸ்கார் உள்ளிட்ட வெளிநாட்டு விருதுகள் மற்றும் திரைப்பட விழாக்களின் பின்னால் நம் மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு என்று தனியான திரைப்பட விழாக்கள் இல்லை. சுமார் 222 நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும், அவர்களது படைப்புகளுக்கும் தனி அங்கீகாரம்  கிடைக்க வேண்டும், அதற்காக தமிழர்களுக்கான திரைப்பட விழா ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நான் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நினைத்து வந்தேன். பிறகு 20210 ஆம் ஆண்டு அதற்கான முதல் அஸ்த்திவாரத்தை அமைத்து, சிறுக சிறுக என்று இன்று மிகப்பெரிய விழாவாக நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஆரம்பிக்கும் போது எனக்கு எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை. நார்வே நாட்டில் 15 ஆயிரம் மக்கள் தான் இருப்பார்கள், ஏதோ ஒரு திரைப்பட விழா என்று தான் நினைப்பார்கள். ஆனால், இன்று சுமார் இரண்டரை கோடிக்கு மேல் நான் விதைத்திருக்கிறேன். நம் படைப்புகளை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான முயற்சி தான் இந்த திரைப்பட விழா. ஆனால், விருது அறிவிக்கப்பட்ட 25 கலைஞர்களையும் நார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று விருது வழங்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால், அவர்களை அங்கே அழைத்து செல்வது என்பது மிகப்பெரிய பொருட்செலவு. அதனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன், விருது அறிவிக்கப்பட்ட அனைத்து கலைஞர்களையும் நார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று கெளரவிக்க வேண்டும், அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆண்டு முதல்,  ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த எங்கள் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் விருது வழங்குவதை பெருமையாக அறிவிக்கிறோம். நாங்கள் தொடர்ந்து இந்த விழாவை நடத்திக் கொண்டிருப்போம். எனக்கு பிறகு என் இடத்தில் இருந்து நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை நடத்துவார்கள். நிச்சயம் ஒரு நாள் ஆஸ்கார் விருதுக்கு சமமான விருதாக சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விருது இருக்கும், என்று கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.