dil raju abour game changer and shankar

ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் நீண்ட காலமாக உருவான ‘கேம் சேஞ்ஜர்’ படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருக்க எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியிருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான வரவேற்பை பெற்றது. இருப்பினும் படத்திற்கு இருந்த ஓபனிங்கால் முதல் நாளில் மட்டும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று ரூ.186 கோடிக்கு மேல் வசூலித்தது. அதன் பிறகு பெரிதாக வசூல் ஈட்டவில்லை. பாடல்களும் பெரிதாக ஹிட்டடிக்கவில்லை. இது குறித்து கடந்த மார்ச்சில் பேட்டி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தமன், எந்த பாடலிலும் சரியான ஹூக் ஸ்டெப் இல்லை என கூறியிருந்தார். இதையடுத்து கடந்த மாதம் படத்தின் எடிட்டர் ஷமீர் முகமது, ஷங்கருடன் பணிபுரிந்தது மோசமான அனுபவம் என்ற ரீதியில் பேட்டியளித்திருந்தார். அதாவது, படத்தின் நீளம் முதலில் 7.5 மணி நேரம் இருந்ததாகவும் அடை தன்னிடம் கொடுத்து ட்ரிம் செய்ய சொன்ன பிறகு 3 மணி நேரமாக குறைத்ததாகவும் பின்பு தனிப்பட்ட சில காரணங்களால் படத்தை விட்டு வெளியேறியதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் எடிட்டர் கூறியது குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ தற்போது பேசியுள்ளார். சமீபத்திய பேட்டியில் இது குறித்து பேசிய அவர், “பெரிய இயக்குநர்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும்போது, நூறு சதவீதம் பிரச்சனை வரும். இது எனக்கு மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லாருக்கும் தான். படத்தின் நேரம் குறித்து எடிட்டர் சொன்னது உண்மைதான். பெரிய இயக்குநர்களுடன் பணிபுரியும் போது இதுபோன்ற குறுக்கீடு நிச்சயம் இருக்கும். ஒரு தயாரிப்பாளராக தவறு நடக்கும்போது அதைத் தடுப்பதுதான் என் பொறுப்பு, ஆனால் அதை செய்ய தவறிவிட்டேன். அதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

Advertisment

என்னுடைய திரை வாழ்க்கையில் இது போன்ற பெரிய இயக்குநர்களுடன் படம் பண்ணியதில்லை. கேம் சேஞ்ஜர் என்னுடைய முதல் தவறான முடிவு. ஒப்பந்தத்தில் என்னுடைய முடிவுகளை தெளிவாக சொல்லிவிட்டு படப்பிடிப்பிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை நான் செய்யவில்லை. இதுதான் என்னுடைய முதல் தவறு. அதை ஏற்றுக் கொண்டு கடந்து வந்துவிட்டேன்” என்றார்.