
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ள பப்லு என்கிற பிரித்விராஜ் (வயது 56), முதல் முறையாக ‘நான் வாழ வைப்பேன்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘வானமே எல்லை’ படத்தில் இளமைத் தோற்றத்தில் நடித்தார். சிகரம், அழகன், மணிரத்னம், வீரமணி, அவள் வருவாளா, நாகேஸ்வரி, வாரணம் ஆயிரம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் பப்லுவுக்கு பினா என்கிற பெண்ணுடன் திருமணம் ஆனது. இருவருக்கும் 25 வயதில் அஹத் எனும் மகன் ஒருவர் உள்ளார். இவரது மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருந்ததன் காரணமாக சில ஆண்டுகள் சினிமா மற்றும் சின்னத்திரையில் இருந்து ஓய்வெடுத்து மகனை குணப்படுத்த சிகிச்சைகளையும் பப்லு மேற்கொண்டார். தற்போது, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சின்னத்திரையில் நடத்தி வருகிறார். இந்நிலையில், பப்லுவுக்கும் அவரது மனைவி பினாவுக்கும் மன வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் பப்லு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பப்லு 23 வயதுடைய மலேசிய பெண்ணை திருமணம் செய்ததாகவும், எப்போது நடைபெற்றது என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.