இதையடுத்து இப்படம் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருவதாகப் படக்குழு அறிவித்தது. ஆனால் வெளிவரவில்லை. இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி, ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில், கௌதம் மேனன், 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் திருப்பி கொடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதுவரை படம் வெளியிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்பு பணம் திரும்ப செலுத்தப்படுமெனவும், அதன் பிறகே படம் வெளியிடப்படுமெனவும் கௌதம் மேனன் சார்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கெளதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.