மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி பல கட்டங்களாக நடந்து கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் வெளியானது. படம் அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால் படம் நன்றாக இருப்பதாக முழுப்படத்தை பார்த்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்டின் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் படக்குழுவை பாராட்டியிருந்தார். இதுவரையில் படத்தில் இருந்து ‘தீக்கொளுத்தி’, ‘றெக்க றெக்க’, ‘சீனிக்கல்லு’ மற்றும் ‘தென்நாடு’ என நான்கு பாடல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் புரொமோஷனை படக்குழு ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற துருவ் விக்ரம், படம் குறித்து பேசுகையில் இப்படம் தான் என்னுடைய முதல் படம் என பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் இதுவரை இரண்டு படம் நடிச்சிருக்கேன். அந்த இரண்டு படத்தையும் பார்க்கலைன்னா கூட பிரச்சனை இல்லை. ஆனா இந்த படத்தை கண்டிப்பா பாருங்க. இதுதான் என்னோட முதல் படம். அப்படிதான் இந்த படத்த நான் பார்க்குறேன். நீங்களும் அப்படிதான் பார்ப்பீங்கன்னு நம்புறேன். இந்த படத்துல வேலை பார்த்த எல்லாரும் பயங்கரமா உழைச்சிருக்கோம். ஆனா இதையெல்லாம் தாண்டி நான் இந்த படத்துக்கு நூறு சதவீதம் உழைச்சிருக்கேன். அது தெரியுதா இல்லையான்னு தியேட்டர்ல நீங்க பார்த்து முடிவுபன்னுங்க. என்னையும் எங்க எல்லாரையும் தாண்டி இந்த படத்துக்காக மாரி செல்வராஜ் ரொம்ப கஷ்டப்பட்டு இறங்கி ஒரு சம்பவம் பண்ணிருக்கார். அந்த சம்பவம் உங்க எல்லாருக்கும் போய் சேரனும். அதனால கண்டிப்பா எல்லாரும் படத்துக்கு போங்க” என்றார்.
துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனது தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது பைசன் படத்தில் நடித்துள்ளார்.