நடிப்பு, பாடுவது, பாடல் எழுதுவது, இயக்குவது என அனைத்து துறைகளிலும் பயணிப்பவர் தனுஷ். இவர் இயக்கத்தில் முதலில் வெளியான படம் 'ப.பாண்டி'. இப்படத்தில் ராஜ்கிரண், ரேவதி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகினார். இப்படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கி இரண்டாம் கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தனுஷ் நடிப்பில் பிஸியாக இருந்து வந்தார்.
தற்போது மீண்டும் அப்படத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதில் தனுஷ் கதாநாயகனாகவும், பிரபல தெலுங்கு நடிகர் 'நாக அர்ஜுனா' மற்றும் 'அதிதி ராவ்' ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்', மித்ரன் ஜவகர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்', தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் 'வாத்தி' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனை முடித்துவிட்டு தனது இரண்டாவது படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.