தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளியான நிலையில், அதன் ரிலீசுக்குக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இப்படம் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு படக்குழு தெரிவித்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் முதல் பாடல் குறித்த அப்டேட் ஒன்றை ஜி.வி. பிரகாஷ் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், "இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் … புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் …. நாந்தாண்டா நீதி ... நாந்தாண்டா நீதி …" என்ற வரிகளை குறிப்பிட்டு இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.வி பிரகாஷ் இசையில் தனுஷ் பாடிய ‘ஒன் மேல ஆசதான்’ (ஆயிரத்தில் ஒருவன்)'ஓட ஓட ஓட தூரம் குறையல...' (மயக்கம் என்ன), 'காதல் என் காதல் ...' (மயக்கம் என்ன), 'பொல்லாத பூமி...' (அசுரன்), 'கண்ணழகு ரத்தினமே ...' (அசுரன்) பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அந்த வகையில் இந்த பாடலும் வரவேற்பு பெறும் என பரவலாக பேசப்படுகிறது.