கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் தற்போது 'வாத்தி' படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் படத்தின் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் தனுஷ் கல்லூரி மாணவன் கெட்டப்பில் தோன்றியுள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கல்லூரி மாணவன் கெட்டப்பில் தோன்றியுள்ள இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகர் தனுஷ் 'வாத்தி' படத்தின் ஒரு பாதியில் மாணவனாகவும், மற்றோரு பாதியில் கல்லூரி பேராசிரியராகவும் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.