
தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் கடந்த 20ஆம் தேதி வெளியான படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக வெளியான இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிய இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களே ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. வசூல் ரீதியாக முதல் இரண்டு நாளில் ரூ. 55 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் சக்சஸ் மீட் ஹைதரபாத்தில் நடைபெற்றது. இதில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நிகழ்வில் தனுஷ் பேசியதாது, “இன்றைக்கு தியேட்டர்களில் படம் ஓடுவது கேள்வி குறியாகியுள்ளது. ஆடியன்ஸை தியேட்டருக்கு வரவழைக்க பயங்கர ஆக்ஷன் காட்சிகள், ஹெலிகாப்டர்கள் பறக்கும் காட்சிகள், பாம் வெடிக்கும் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் தேவை என ஒரு கட்டுக்கதை இப்போது மெதுவாக அதிகரித்து வருகிறது. ஆனால் சேகர் கம்முலா ஒரு புது நம்பிக்கை கொடுத்துள்ளார். தூய்மையான மனம் மூலம் ஆடியன்ஸை தியேட்டருக்கு வரவழைக்கலாம் என பல இயக்குநர்களுக்கு வழிவகுத்துள்ளார். மனித உணர்வுகள் தான் இருப்பதிலேயே பெரிய விஷயம்.
வருங்கால இயக்குநர்கள் பெரிய பட்ஜெட், பிரம்மாண்ட செட்டுகள், சூப்பர் ஹீரோ படங்கள் தான் கைகொடுக்கும் என்பதை விட நல்ல மனித உணர்வுகள் நிறைந்த படங்களும் கைகொடுக்கும் என்று சிந்திக்க வேண்டும். மனித உணர்வுகளைப் பற்றி பேசும் படம் நிச்சயம் வெற்றி பெறும். அது ரொம்ப முக்கியம். அதனால் பல இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் சேகர் கம்முலுலாவிற்கு நன்றியுள்ளவராக இருக்கப் போகிறார்கள். இதே போல் மனித உணர்வுகளை பேசிய தமிழ் படமான டூரிஸ்ட் ஃபேமிலி நல்ல வெற்றி பெற்றுள்ளது. நிறைய ஆடியன்ஸை தியேட்டருக்கும் வர வைத்தது. அதனால் இது போன்ற படங்களை ஆடியன்ஸூம் பார்க்க தயாராகத்தான் இருக்கிறார்கள். அதனால் அந்த கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “என் அம்மா எப்போது சொல்வார், வெற்றி பெறும் போது கம்மியாக பேச வேண்டும் என்று. அதனால் கம்மியாகவே பேசப் போகிறேன். அதிகம் பேசப் போவதில்லை” என்றார்.