dhanush smoking case Exemption from appearing trial

Advertisment

2014-ஆம் ஆண்டு 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'வேலையில்லா பட்டதாரி'. இப்படத்தில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தொடர்பாக சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சி வரும்போது எச்சரிக்கை வாசகம் முறையாக இடம்பெறவில்லை எனவும் தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் சார்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு தயாரிப்பு நிறுவனம் மற்றும் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் இயக்குநர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் மீது நடவடிக்கை வேண்டும் என புகார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இருவரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதே போன்று நடிகர் தனுஷ் தரப்பில் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்துவிலக்கு அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் தனுஷ் இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதி தள்ளி வைத்துள்ளார்.