
தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.
இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஜூன் 20ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. மொத்தம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் படத்தின் அளவு இருக்கிறது. இந்த நிலையில் ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பட புரொமோஷனில் படக்குழுவினர் பிஸியாக இருக்கின்றனர். அந்த வகையில் படத்தின் மூன்றாவது பாடலான ‘பிப்பி பிப்பி டம் டம் டம்’ பாடல் மும்பையில் வெளியிடப்பட்டது. இதில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தனுஷ் பேசுகையில், “நானும் ராஷ்மிகாவும் 7 மணிநேரம் குப்பை கிடங்கில் நடித்தோம். ராஷ்மிகா நலமாகத்தான் இருந்தார். அவரிடம் என்ன இது என்று கேட்டேன். அவர் எனக்கு எந்த ஸ்மெல்லும் வரவில்லை என்றார். அது எனக்கு புரியவே இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “குப்பை கிடங்கில் நடிப்பது பெரிய சவால் என கேள்வி பட்டேன். அதனால் நாங்கள் மாஸ்க் அணிந்துதான் அங்கு சென்றோம். கேள்விப்பட்டது போல் அவ்வளவு மோசமாக அது இல்லை” என்றார்.
பின்பு, “இது போன்ற படத்துக்கு விளம்பரம் தேவை. இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலான ஒன்று. இதில் நான் யாசகம் பெறும் நபராக நடித்திருக்கிறேன். அதற்காக நான் நிறைய ஆராய்ச்சி செய்து ஹோம் ஒர்க்கலாம் பண்ணி நடிக்கவில்லை. இயக்குநர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். அவர் ஒரு திறமையான மனிதர். அந்த கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் எப்படி பேச வேண்டும் என சொல்லி கொடுத்தார். அது எனக்கு உதவியாக இருந்தது. எனது வேலையை இன்னும் ஈஸியாக மாற்றியது. இந்த கேரக்டர் நான் இதுவரை நடித்ததிலே மிகவும் வித்தியாசமானது” என்றார்.