Skip to main content

தனது நண்பருக்காக தனுஷ் வெளியிட்ட #IamBadBoy பாடல்!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020
srikanth

 

நடிகர் தனுஷ் நடித்து கிட்டத்தட்ட ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது 'ஜகமே தந்திரம்' திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் OTT ரிலீஸா தியேட்டர் ரிலீஸா என தனுஷ் ரசிகர்கள் விவாதித்து வர, இன்று மாலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாடலை ரிலீஸ் செய்தார். அது அவரது படப்பாடல் அல்ல. ஸ்ரீகாந்த் நடித்துள்ள 'மிருகா' படப்பாடல். 'I am a bad boy' என்ற அந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளவர் அருள்தேவ். பாடலை எழுதியுள்ளவர் A.R.P.ஜெயராம்.

 

நடிகர் ஸ்ரீகாந்த், 'ரோஜாக்கூட்டம்' திரைப்படத்தில் சசி இயக்கத்தில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த இளம் ஹீரோவாகத் திகழ்ந்தார். ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு என வெற்றியையும் நேர்மறை  விமர்சனத்தையும் பெற்ற நல்ல படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். பிறகு 'ஜூட்' படத்தின் மூலம் ஆக்ஷன் பாதைக்கு சென்றார். அதன் பிறகு பல விதமான பாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். 2002ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை இளமை மாறாமல் ஆக்ட்டிவாக இயங்கி வரும் ஸ்ரீகாந்த்தின் அடுத்த படம் 'மிருகா'.

 

ஸ்ரீகாந்த்துடன் ராய்லக்ஷ்மி இணைந்து நடித்துள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் M.V.பன்னீர்செல்வம். உள்ளே வெளியே, மக்களாட்சி, ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர் 'மிருகா'வின் ஒளிப்பதிவையும் கவனித்துள்ளார்.  J.பார்த்திபன் இந்தப்  படத்தை இயக்கியுள்ளார். இந்தியாவிலேயே ஒரு திரைப்படத்தில் புலி அதிக நேரம் வருவது இந்தப் படத்தில்தான் என்கிறார்கள் படக்குழுவினர்.

 

இன்று தனுஷ் வெளியிட்டுள்ள 'I am a bad boy' பாடல், படத்தில் ஸ்ரீகாந்த்தின் கேரக்டரை விளக்கும் பாடலாக அமைந்துள்ளது. இசையமைப்பாளர் அருள்தேவ் 'கத்துக்குட்டி', 'பூவரசம் பீப்பீ' உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 'பாகுபலி', 'நடிகையர் திலகம்' போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். காடு, புலி என விஷுவல் - சௌண்ட் ட்ரீட்டாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் வெளியிட காத்திருக்கிறார்கள். தனுஷ் - ஸ்ரீகாந்த், இருவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. தனது நண்பருக்காக தனுஷ் இன்று வெளியிட்ட இந்தப் பாடல் யூ-ட்யூபில் நல்ல கவனத்தை பெற்றுவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“முதன் முதலில் கலைஞர் என்னை பார்த்து இவ்வாறு அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது”- நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
actor Dhanush says  It was a surprise when the artist called me this for the first time

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்துகிறது. 

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமே இல்லை. ஒரு படத்தின் பூஜையின் போது நான் முதல் முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கே வந்திருந்த கலைஞர் என்னை பார்த்து ‘வாங்க மன்மத ராஜா’ என்று கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா? என ஆச்சரியமாக இருந்தது. அதை பார்த்து நான் நெகிழ்ச்சி அடைந்தேன். 

ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்பதை நம்ப முடியாது. கலைஞரை நான் அப்படித்தான் பார்க்கிறேன். யாராவது சொன்னால் தான் அவர் மறைந்து விட்டார் என்று நினைவுக்கு வரும். இப்பவும் அவர் நம் கூட வாழ்ந்து கொண்டிருப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கலியன் பூங்குன்றனார் சொல்லிருப்பார். ஆனால், நம்முடைய கலைஞர் 2000ல் ‘நான் என்று சொன்னால், உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டும்’ என்று சொன்னார். நாமாக வாழ்வோம் நலமாக வாழ்வோம்” என்று பேசினார்.