/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/90_36.jpg)
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தனது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது வரை மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கதிரேசன் உடல் நலக்குறைவால்,மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளது எனக்கூறி வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என கதிரேசனின் மனைவி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கறிஞர் டைட்டஸ் கூறுகையில், "கதிரேசனின் வழக்கு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் கதிரேசன் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அவரது டி.என்.ஏ-வை எடுத்து பராமரிக்க வேண்டும். ஏற்கனவே வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் அவரது அங்க அடையாளத்தை லேசர் மூலம் அழித்து இருந்தார். பள்ளிக்கூட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தவறாக தாக்கல் செய்துள்ளார்.
எனவே, தனுஷின் பெற்றோர் கதிரேசன் - மீனாட்சி ஆகியோர்தான் என்பதை ஆவணங்கள் உறுதி செய்கின்றன. தனுஷ் உண்மையை மறைக்க பார்க்கிறார். எங்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் பதிவு செய்வோம் என்று சொன்ன தனுஷ் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. கதிரேசன் போல் எத்தனையோ பெற்றோர், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)