தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார்.
இதில் ராயன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிரது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை மே 9 ஆம் தேதியும் ஜூன் மாதம் படம் வெளியாகவுள்ளதாகவும் அண்மையில் படக்குழு அறிவித்தது. பின்பு ‘அடங்காத அசுரன்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளதாக தெரிவித்தது. இந்த நிலையில் இப்பாடலை தனுஷ் எழுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபு தேவா இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏ.ஆர் ரஹ்மான், தனுஷ், பிரபு தேவா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இப்பாடலில் பணியாற்றியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.