
தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.
இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஜூன் 20ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. மொத்தம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் படத்தின் அளவு இருக்கிறது. இந்த நிலையில் ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பட புரொமோஷனில் படக்குழுவினர் பிஸியாக இருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் இணை தயாரிப்பாளரான சுனில் நரங், ஓடிடி நிறுவனம் குறித்து ஒரு அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், “ஓடிடி நிறுவனங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றிவிட்டார்கள். அவர்களின் விருப்பப்படித்தான் எல்லாமே நடக்கிறது. படத்தின் போஸ்ட் புரொடைக்ஷன் பணிகள் நடந்து வரும் போது அவர்களிடத்தில் பணிகள் முடிய தாமதம் ஆகும், அதனால் ஜூலையில் ரிலீஸ் செய்யலாம் என்றேன். ஆனால் அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 20ஆம் தேதி படம் வெளியாகவில்லை என்றால் ஒப்பந்தத்தின்படி ரூ. 10 கோடியை குறைத்து விடுவதாக மிரட்டினர்” என்றார். இப்படத்தின் ஓ.டி.டி. உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.