Skip to main content

பதிவிட்ட போஸ்ட்டை தூக்கிய கார்த்திக் நரேன்; சர்ச்சையைக் கிளப்பும் மாறன் பற்றிய யூகங்கள்...

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 

dhanush maaran movie  issue

 

கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட்  உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தனுஷ் பத்திரிகையாளராக நடித்துள்ள இப்படம்  நேற்று ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

 

இதனிடையே படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைதள பக்கத்தில் "ரைட்டு... உண்மைய அப்புறம் சொல்றேன்" என பதிவிட்டிருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை கிளப்பியது. இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் பல யூகங்களில் கதை சொல்லி வருகின்றனர்.

 

கார்த்திக் நரேன் 'மாஃபியா' படத்தை  இயக்கி கொண்டிருக்கும் போதே தனுஷ் நடிக்கும் 'மாறன்' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும், முதலில் 'மாறன்' கதைக்கு ஓகே சொன்ன தனுஷ், பிறகு 'மாஃபியா' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதையடுத்து படத்தின் கதையில் தலையிட்டு மலையாளத்தில் ஹிட்டடித்த 'வரதன்' மற்றும் 'வைரஸ்' படங்களின் கதையாசிரியர்கள் ஷர்பு - சுஹாஸ் ஆகியோருடன் சேர்ந்து மாறன் படத்தில் பணியாற்றுமாறு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் கார்த்திக் நரேன், ஷராஃப் மற்றும் ஷுகஸ் ஆகியோருடன் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகியது. 

 

இதனிடையே 'மாறன்' படத்திற்கு வசனம் எழுத பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் படைப்பு ரீதியாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து அவர் வெளியேறினார். மேலும் 'மாறன்' படத்தில் தனுஷின் தலையீடு கொஞ்சம் அதிகமாகவே இருந்ததாகவும், அதுதான் மாறன் படத்தின் மோசமான விமர்சனங்களுக்கு காரணம் எனவும் சிலர் கூறிவருகின்றனர். இந்நிலையில், கார்த்திக் நரேன்  அதைத்தான் 'உண்மையை அப்புறம் சொல்றேன்' என பதிவிட்டு இருந்தாக சிலர் சமூகவளைதளங்களில் கூறிவருகின்றனர். 

 

இந்நிலையில், சர்ச்சைக்கு உள்ளான கார்த்திக் நரேனின் இந்த பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இப்படி பரவி கிடக்கும் பல யூகங்களை பார்த்ததாலேயே தனது பதிவை கார்த்திக் நரேன் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்தும் அவரை விடாத ரசிகர்கள் உண்மையை சொல்றேன்னு சொல்லிட்டு. இப்படி பாதிலேயே பதிவை நீக்கினா எப்படி.? என்ற தோரணையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலந்தி வலைபோல் ஏகப்பட்ட சிக்கல் இருக்கும் 'மாறன்' பட விவகாரத்தில் உண்மை நிலை வெளிவந்த பிறகே யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

 

 

சார்ந்த செய்திகள்