ரஜினி, தனது 50 ஆண்டுகால திரைபயணத்தை கொண்டாடும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘கூலி’ படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இதனால் இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக அமைந்துள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. மற்ற மாநிலங்களில் காலை 6 மற்றும் 8 மணிக்கே தொடங்கியது. இதனால் ரஜினி ரசிகர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் காலை முதலே திரையரங்க வளாகத்திற்குள் குவிந்த ரசிகர்கள், ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனருக்கு பால் அபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து கேக் வெட்டி படத்தை உற்சாகமாக வரவேற்றனர். இதனிடையே படத்தில் முன்னணி நடிகர்களான நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் என நட்சத்திர பட்டாளமே இருப்பதால் மற்ற மாநிலங்களிலும் படத்துக்கு மாஸ் ஓபனிங் கிடைத்துள்ளது.
இப்படம் லோகேஷின், எல்.சி.யு-வில் வராது என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தாலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இப்படம் எல்.சி.யு-வில் வரும் என ரசிகர்கள் யூகித்து வந்தனர். ஆனால் அப்படி வராது என்றும் இது தனுத்துவமான படம் என்று லோகேஷ் கனகராஜ் நேற்று இரவு மீண்டும் தெளிவுபடுத்தியிருந்தார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அனிருத் இசையில் பாடல்களெல்லாம் ஏற்கனவே ஹிட்டடித்துள்ளன. அந்த பாடல்களையும் ரஜினியின் பழைய பாடல்களையும் திரையரங்க வளாகத்திற்குள் ஒலிக்க செய்து வைப் செய்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் ரசிகர்களுடன் திரை பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துள்ளனர். சென்னையில் உள்ள திரையரங்குகளில் தனுஷ், லதா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்டோர் படம் பார்க்க வந்துள்ளனர். அவர் திரையரங்கிற்கு வருகையில் ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.