
இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா திருமண வாழ்க்கை ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale)என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியது. நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடந்த 18ஆம் தேதி அந்நிறுவன ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு முன்னதாக படத்தின் ட்ரைலர் வெளியான போது, அதில் நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனும் - நயன்தாராவும் பேசும் மூன்று வினாடி வீடியோ இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ட்ரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்த மூன்று வினாடி வீடியோவிற்கு பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டிஸ் அனுப்பினார். இதனை நயன்தாரா தனது அறிக்கையின் மூலம் தெரிவித்து, இந்த செயல் கீழ் தரமானது என்று கூறி தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்ப, நயன் தாராவுக்கு ஆதரவாகவும் தனுஷுக்கு ஆதரவாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதையடுத்து அந்த ஆவணப் படம் வெளியான நிலையில் அதில் நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் 20 வினாடிக்கு மேலாக இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், நானும் ரௌடி தான் பட படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குறிப்பிட்டு நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையைச் சேர்ந்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாகக் கூறி, இந்த வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு அடுத்த வாரத்துக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.