
இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து கடந்த 2022 ஜூன் 9ஆம் தேதி கரம் பிடித்தனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. மேலும் அதை இயக்கும் பணிகளை கெளதம் மேனன் மேற்கொண்டார். இதனால் பல்வேறு கட்டுபாடுகளுடன் இத்திருமணம் நடந்தது.
இத்திருமணம் ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale)என்ற பெயரில் நீண்ட காலமாக உருவாகி வந்தது. இந்த ஆவணப்படம் நயன்தாராவின் திருமணம் அல்லாது அவரது வாழ்க்கை பயணத்தையும் விவரிப்பதாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆவணப்படம் வருகிற 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தாளன்று நெட் ஃபிளிக்ஸில் வெளியாகவிருந்தது. இதையொட்டி படத்தின் ப்ரொமொ தொடர்ச்சியாக அடுத்தடுத்து சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு ப்ரொமோவில் நானும் ரௌடி தான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளும், பாடல்களும் மூன்று விநாடி இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் படத்தின் பாடலையும், காட்சியையும் தன்னிடம் அனுமதி கேட்காமல் வீடியோவில் பயன்படுத்தியதாகக் கூறி 3 விநாடிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை நயன்தாராவே தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து, நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அந்த அறிக்கையில், “தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம். உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.
தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?” எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. நயன்தாராவுக்கு நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனுஷ் சார்பில் நயன்தாராவுக்கு நோட்டிஸ் அனுப்பிய வழக்கறிஞர் அருண், நயன்தாராவின் குற்றச்சாட்டுக்கு தனுஷ் பதிலளிப்பார் என தெரிவித்துள்ளார்.