ப.பாண்டி, ராயன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தை தனுஷ் இயக்குவதோடு மட்டும் இல்லாமல் அவரது உண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் முதல் பாடலாக வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ...’ நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வெளியான ‘காதல் ஃபெயில்’, ‘ஏடி’ மற்றும் ‘புள்ள’ பாடல்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன. படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. நாளை(21.02.2025) இப்படம் காலை 9 மணி சிறப்பு காட்சியுடன் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படம் குறித்து தனுஷ் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இந்த படத்தை எடுக்கும் போது எந்தளவு சந்தோஷமா ஜாலியா எடுத்தோமோ அதே அளவு நீங்க பார்க்கும் போதும் என்ஜாய் பன்னுவீங்கன்னு நினைக்கிறேன். இந்த படத்துல நடிச்சிருக்குற இளைஞர்கள் அத்தனை பேரும் அவங்களுடைய எதிர்காலத்த நோக்கி, கண்ணுல நிறைய கனவுகளோட பாத்து காத்துகிட்டு இருக்காங்க. அந்த கனவுகள் எல்லாம் நிறைவேறனும்னு கடவுள நான் வேண்டிக்கிறேன். அந்த இடத்துல நானும் இருந்திருக்கேன். அவங்களோட ஃபீலிங்ஸ் என்னன்னு எனக்கும் நல்லா தெரியும்” என்றார்.