தனுஷ் இயக்கத்தில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இவருடன் நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் மற்றும் அர்ஜூன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தினை ரெட் ஜெயண்ட் பேனரில் இன்பன் உதயநிதி தமிழகத்தில் வெளியிடுகிறார்.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ் பல்வேறு விஷயம் பேசினார். அப்போது அவரிடம் ஹேட்டர்ஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஹேட்டர்ஸ்னு ஒரு கான்செப்டே இல்லைங்க. அப்படி யாருமே கிடையாது. எல்லாரும் எல்லார் படமும் பார்ப்பாங்க. ஒரு குறிப்பிட்ட ஒரு குரூப், அவங்களுடைய சர்வைவலுக்காகவோ இல்ல ஏதோ ஒரு விஷயதுக்காகவோ... 30 பேர வச்சிக்கிட்டு 300 ஐடி மூலமா பரப்புர வெறுப்பு தான் இங்க இருக்கு. அந்த 30 பேரும் போய் படம் பார்ப்பாங்க. ஆனா கள யதார்த்தமே வேற. நம்ம பசங்க களத்துல இறங்கி அவங்கள பார்த்துப்பாங்க.
நான் எப்போதும் சொல்றதுதான், நமக்கு அன்பு தராங்களா, அன்பை திருப்பி கொடுப்போம், வெறுப்பு தராங்களா அப்பவும் அன்பையே திருப்பு கொடுப்போம். அன்புவின் எழுச்சி தான் எல்லாமே” என்றார்.