Skip to main content

“என் ரசிகர்களை நான் ரொம்ப அழகா குழப்பி வச்சிருக்கேன்” - தனுஷ் விளக்கம்

Published on 18/06/2025 | Edited on 18/06/2025
dhanush about fans in kuberaa audio launch

தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 

இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். அந்த வகையில் தனுஷும் தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். நடுவே தனத் திரை அனுபவம் குறித்தும் தனது ரசிகர்கள் குறித்தும் பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “2000-த்துல என்னுடைய ஃபர்ஸ்ட் ஷாட் நடிச்சேன். 25 வருஷம் ஆகுது. 2002ல என்னுடைய முதல் படம் ரிலீஸாச்சு. 23 வருஷம் ஆகுது. நான் நடிக்கனும்னு ஆசைப்பட்டுலாம் வரல. டான்ஸ் கிளாஸுக்கு போய்  டான்ஸ் கத்துக்கல. ஃபைட் கிளாஸுக்கு போய் ஃபைட் கத்துக்கல, நடிப்புக்கு ஒரு கிளாஸுக்கு போய் நடிக்கவும் கத்துக்கல. சினிமாவுக்காக நேந்து விட்ட ஆள் நான் கிடையாது. அப்பா கேமரா முன்னாடி இழுத்துட்டு வந்தார். செல்வராகவன் நடிப்பு சொல்லி கொடுத்தார். அப்புறம் ஒரு ஸ்டாரா மாத்துனார். அதுக்கப்புறம் என்ன பன்னனும் எங்க போகனும்னு தெரியல. வழிகாட்டவும் யாரும் இல்ல. அப்போ எனக்கு 18 வயசுதான். ரொம்ப குழப்பமா இருக்கும். 

திருடா திருடி, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், வேலையிலா பட்டதாரி... இதெல்லாம் மாஸ் கமர்ஷியல் படங்கள், இது தான் உங்களுக்கு செட் ஆகும்னு சிலர் சொல்வாங்க. சில பேர் 3, மயக்கம் என்ன, ஆடுகளம், அசுரன்... இதெல்லாம் நடிப்புக்கான படங்கள். இதை நீங்க பன்னுங்கன்னு சொல்வாங்க. கொஞ்ச பேரு யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம்... இதெல்லாம் ஃபேமிலி படங்கள், இந்த ரூட்ல போங்கன்னு சொல்வாங்க. அவங்களுக்கு என்ன தேவையோ அதுக்கு ஏத்த மாதிரி சொல்வாங்க. எதுல போறதுன்னே தெரியாது. ஆனா, என் ரசிகர்களை நான் ரொம்ப அழகா குழப்பி வச்சிருக்கேன். என்கிட்ட இருந்து எப்ப வேணா என்ன வேணாலும் வரும். அதை குழப்பமே இல்லாம அவங்க தெளிவா புரிஞ்சிகிட்டாங்க. யார் பாதை காட்ட இல்லைன்னாலும் நமக்கு ஒரு பாதையை உருவாக்கி அதுல போய்ட்டிருப்பேன். அதுதான் சரியாக இருக்கும்” என்றார். இதனிடையே ரசிகர்கள் வட சென்னை 2 அப்டேட் கேட்டு கூச்சலிட்டனர். அதற்கு 2018ல் இருந்து கேட்குறீங்க... அடுத்த வருஷம் என தனுஷ் பதிலளித்தார். 

சார்ந்த செய்திகள்