/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12_110.jpg)
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர்நடிகர் தனுஷ் தனது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனையடுத்து கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், கஸ்தூரிராஜா தங்களை கொலை செய்ய முயல்வதாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவுகளைப் பெற்றுவிட்டதாகவும் கூறி தனுஷுக்கும், கஸ்தூரிராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பின்பு இந்தக் குற்றச்சாட்டுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என கதிரேசன் - மீனாட்சி தம்பதியினருக்குகஸ்தூரிராஜா மற்றும் தனுஷ் தரப்புநோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்பட்டது. ஆனால் கதிரேசன் - மீனாட்சி தரப்பு எங்களுக்கு இது குறித்து எந்த விதமான நோட்டீஸும் வரவில்லை என மறுத்தனர்.
பிறகு கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "நடிகர் தனுஷ் என் மகன் என நான் உரிமை கோரிய வழக்கில் தனுஷ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இது தொடர்பாக மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றத்தில், தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தேன். என் வழக்கை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம், தனுஷ்இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன்தான் என்ற முடிவுக்கு வரவில்லை. மேலும் தனுஷ் தரப்பு ஆவணங்களில் போலி ஆவணங்கள் இருப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு எண் எதுவுமின்றி தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழை கருத்தில் கொள்ளாமல் வழக்கை தள்ளுபடி செய்தது ஏற்புடையது அல்ல. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பார்த்த பின் முடிவெடுக்க வேண்டும்.
தனுஷின் பிறப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையை அறிய சான்றிதழை மதுரை மாநகராட்சிக்கு கீழ் நீதிமன்றம் அனுப்பியது. அதன் முடிவு வருவதற்குள் எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல. எனவே, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததற்காக நடிகர் தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய என் மனுவை தள்ளுபடி செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, என் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றத்திடம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்தகட்ட விசாரணையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் பதிவுத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)