Skip to main content

''பிரபாகரனை அவமதிக்கும்‌ நோக்கத்துடன்‌ ஒருபோதும்‌ துல்கர் நடந்துகொள்ள மாட்டார்‌'' - பிரபல இயக்குனர் நம்பிக்கை 

Published on 29/04/2020 | Edited on 29/04/2020
hvjvh

 

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மலையாள படம் 'வரனே அவஷயமுண்டு'. அண்மையில் ஓடிடி ஃபிளாட்பார்மில் வெளியான இப்படத்தில் பத்திரிகையாளர் ஒருவரின் படத்தைத் தவறுதலாகத் தகுந்த அனுமதியின்றி வைத்ததால் பெரும் சர்ச்சையானது. பிறகு அவரிடம் மன்னிப்புக் கேட்டார் துல்கர் சல்மான். இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை உருவெடுத்துள்ளது. அந்தப் படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாயின் பெயர் பிரபாகரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் காமெடி காட்சி தமிழ் பயனர்களின் மனதைக் காயப்படுத்தியதால் இணையத்தில் 'வரனே அவஷ்யமுண்டு' படக்குழுவைக் கடுமையாக விமர்சித்தனர். இதற்கு துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலுருந்து கோரிக்கை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் அந்தக் காட்சி உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டதல்ல என மன்னிப்பு கேட்டு சமூகவலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடித்த தமிழ்ப் படமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி துல்கர் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"துல்கர்‌ சல்மானை ஐந்து வருடங்களாகத் தெரியும்‌. அனைவரையும்‌ சமமாக மதிக்கும்‌ ஒரு நல்ல மனிதர்‌. தனக்கு மிகவும்‌ பிடித்த ஊர்‌ சென்னைதான்‌ என்று பலமுறை மீடியாக்களில் கூறியிருக்கிறார்‌. நாம்‌ அனைவரும்‌ மதிக்கும்‌ பிரபாகரனை அவமதிக்கும்‌ நோக்கத்துடன்‌ ஒருபோதும்‌ நடந்துகொள்ள மாட்டார்‌. படங்களில்‌ தான்‌ கூறும்‌ வசனங்கள் யார்‌ மனதும்‌ நோகாமல்‌ இருக்குமாறு எப்போதும்‌ தன்னை இயக்கும்‌ இயக்குனர்களிடம் கேட்டுக் கொள்வார்‌. 'சந்திரமுகி' படத்தில்‌ வரும்‌ ஒரு சீரியஸ்‌ வசனம்‌ பின் ‌நாட்களில்‌ நகைச்சுவைக்காகப் பல படங்களில் பயன்படுத்தப்பட்டது. அதேபோல்‌ ஒரு பழைய மலையாளப் படத்தில்‌ ஒரு நடிகர்‌ சீரியஸாக "பிரபாகரா" என்று கூறியது அங்கே மீம்களில்‌ நகைச்சுவையாக ஹிட்‌ அடித்திருக்கிறது. அந்த நகைச்சுவை மீம்‌ மெட்டீரியலை இந்தப் படத்தில்‌ பயன்படுத்தியுள்ளனர்‌. நிச்சயமாக தமிழினத் தலைவரையோ, நம்‌ உணர்வுகளையோ புண்படுத்தும்‌ நோக்கத்தில்‌ வைக்கப்பட்ட காட்சி அல்ல. எனினும்‌ நம்‌ உணர்வுகளுக்கு மதிப்பளித்து துல்கர்‌ வருத்தம்‌ தெரிவித்துவிட்டார்‌. தவறான புரிதலால்‌ ஏற்பட்ட இந்தக் கசப்பான விஷயத்தைக் கடந்து போவோம்‌. ஒரு நண்பனாக துல்கர்‌ எப்பொழுதும்‌ தமிழர்‌ உணர்வுகளை மதிப்பவராகவே நான்‌ அறிவேன்‌" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்