இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் " கைதி படத்தில் உயிரிழந்த அர்ஜுன் தாஸ் கதாபாத்திரம் உயிருடன் இருப்பது எப்படி, நம்ம முடியவில்லை" என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த லோகேஷ், " கைதி படத்தில் அன்புவின் தாடை பகுதி மட்டும் தான் நெப்போலியனால் உடைக்கப்படும். அதனால்தான் தையல் அச்சுடன் விக்ரம் படத்தில் தோன்றுவார். இது பற்றி கைதி 2 படத்தில் மேலும் விவரிக்கப்படும்" எனக்குறிப்பிட்டுள்ளார்.