
ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி அதன் மூலம் அவரும் முன்னணி இயக்குநராக உருவானார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கியிருந்தார். 2023ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம் ரூ.1000 கோடி கிளப்பில் முதல் தமிழ் இயக்குநராக அட்லீ இணைந்தார்.
இப்படத்தை முடித்துவிட்டு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க கதையும் எழுதி வருவதாகக் கூறியிருந்தார். ஆனால் அது குறித்து அடுத்த தகவல்கள் வெளியாகவில்லை. விஜய் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருவதால் அந்த படத்தை முடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதால் இந்த புராஜெக்ட் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கூட்டணி சேர்ந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது. இது தொடர்பாக அறிவிப்பு வீடியோ அல்லு அர்ஜூனின் பிறந்தநாளன்று வெளியாகி பல தரப்பிலும் வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக இணைந்துள்ளார். இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், அட்லீ படத்தின் கதையை விவரிக்க அதனை தீபிகா படுகோன் ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார். மேலும் சண்டைக் காட்சிக்கான பயிற்சிகளிலும் தீபிகா படுகோன் ஈடுபாட்டு வருகிறார்.