நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
மேலும் சில பிரபலங்கள் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் செய்து வரும் நிலையில் 'குக் வித் கோமாளி 2' புகழ் நடிகை தர்ஷா குப்தா அவ்வப்போது கஷ்டப்பட்டும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி உதவி செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சாலை ஓரத்தில் வசிப்பவர்களுக்கு இன்று உணவளித்தார். இதுகுறித்து அவர் ட்வீட் செய்துள்ளார். அதில்.. "சாலை ஓரத்தில் உதவும் கரங்களை எதிர்ப்பார்த்துக் காத்து கொண்டிருக்கும் இவர்களுக்கு சுயமாக நாம் முன்வந்து உதவவில்லை என்றால்?.. வேறு யார் உதவுவார்கள்?... உதவுங்கள் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்" என கூறியுள்ளார்.