Skip to main content

மீண்டும் ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம்! 

Published on 15/01/2022 | Edited on 15/01/2022
jgfugug

 

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் என பலரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துவருவதாக கூறப்படுகிறது. 

 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில், 'மாறன்' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் விரைவில் ஹாட் ஸடார் ஓடிடி தளத்தில் வெளியாகிவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் ஜகமே தந்திரம் மற்றும் அத்ரங்கி ரே (கலாட்டா கல்யாணம்) ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பதிவிட்ட போஸ்ட்டை தூக்கிய கார்த்திக் நரேன்; சர்ச்சையைக் கிளப்பும் மாறன் பற்றிய யூகங்கள்...

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 

dhanush maaran movie  issue

 

கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட்  உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தனுஷ் பத்திரிகையாளராக நடித்துள்ள இப்படம்  நேற்று ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

 

இதனிடையே படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைதள பக்கத்தில் "ரைட்டு... உண்மைய அப்புறம் சொல்றேன்" என பதிவிட்டிருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை கிளப்பியது. இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் பல யூகங்களில் கதை சொல்லி வருகின்றனர்.

 

கார்த்திக் நரேன் 'மாஃபியா' படத்தை  இயக்கி கொண்டிருக்கும் போதே தனுஷ் நடிக்கும் 'மாறன்' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும், முதலில் 'மாறன்' கதைக்கு ஓகே சொன்ன தனுஷ், பிறகு 'மாஃபியா' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதையடுத்து படத்தின் கதையில் தலையிட்டு மலையாளத்தில் ஹிட்டடித்த 'வரதன்' மற்றும் 'வைரஸ்' படங்களின் கதையாசிரியர்கள் ஷர்பு - சுஹாஸ் ஆகியோருடன் சேர்ந்து மாறன் படத்தில் பணியாற்றுமாறு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் கார்த்திக் நரேன், ஷராஃப் மற்றும் ஷுகஸ் ஆகியோருடன் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகியது. 

 

இதனிடையே 'மாறன்' படத்திற்கு வசனம் எழுத பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் படைப்பு ரீதியாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து அவர் வெளியேறினார். மேலும் 'மாறன்' படத்தில் தனுஷின் தலையீடு கொஞ்சம் அதிகமாகவே இருந்ததாகவும், அதுதான் மாறன் படத்தின் மோசமான விமர்சனங்களுக்கு காரணம் எனவும் சிலர் கூறிவருகின்றனர். இந்நிலையில், கார்த்திக் நரேன்  அதைத்தான் 'உண்மையை அப்புறம் சொல்றேன்' என பதிவிட்டு இருந்தாக சிலர் சமூகவளைதளங்களில் கூறிவருகின்றனர். 

 

இந்நிலையில், சர்ச்சைக்கு உள்ளான கார்த்திக் நரேனின் இந்த பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இப்படி பரவி கிடக்கும் பல யூகங்களை பார்த்ததாலேயே தனது பதிவை கார்த்திக் நரேன் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்தும் அவரை விடாத ரசிகர்கள் உண்மையை சொல்றேன்னு சொல்லிட்டு. இப்படி பாதிலேயே பதிவை நீக்கினா எப்படி.? என்ற தோரணையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலந்தி வலைபோல் ஏகப்பட்ட சிக்கல் இருக்கும் 'மாறன்' பட விவகாரத்தில் உண்மை நிலை வெளிவந்த பிறகே யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

 

 

Next Story

கொஞ்சம் புரட்சி, கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் பெரிய ஏமாற்றம் - மாறன் விமர்சனம்

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 

dhanush maaran movie review

 

இதற்கு முன் ஓடிடியில் வெளியான தனுஷ் படமான அத்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்) படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனாலேயே மீண்டும் ஓடிடியில் வெளியாகும் மாறன் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை தற்போது ரிலீசாகியுள்ள மாறன் படம் பூர்த்தி செய்ததா...?

 

முன்னாள் அமைச்சர் சமுத்திரகனி இடைத்தேர்தலில் வெற்றி பெற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஊழல் செய்கிறார். இதைக் கண்டுபிடிக்கும் நேர்மையான பத்திரிகையாளரான தனுஷ், அதை உலகுக்கு அம்பலப்படுத்துகிறார். இதற்கிடையே தனுஷ் தங்கையான ஸ்மிருதி வெங்கட் கடத்தப்பட்டு உயிரோடு எரித்து கொலை செய்யப்படுகிறார். தனுஷுக்கு சமுத்திரக்கனி மேல் சந்தேகம் ஏற்பட இந்த கேசை அவரே கையிலெடுத்துத் துப்பு துலக்குகிறார். இறுதியில் உண்மையான குற்றவாளியை தனுஷ் கண்டுபிடித்துத் தண்டித்தாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

துருவங்கள் பதினாறு, மாபியா போன்ற டீசன்டான திரில்லர் படங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்த கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். இதுவே மாறன் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை சுக்குநூறாக உடைத்துள்ளார் இயக்குநர். இப்படி ஒரு அரதப்பழசான கதையை அவர் எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதும், இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க எப்படி ஒத்துக் கொண்டார் என்பதும் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த அளவு ஒரு முதிர்ச்சியற்ற கதையாடல் கொண்ட படமாக இது அமைந்துள்ளது. ஒரு நார்மலான இன்வெஸ்டிகேட்டிவ் கதையில் தங்கை செண்டிமெண்ட் கலந்து கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர். அது பல இடங்களில் வொர்க் அவுட் ஆகாமல் போனது படத்துக்குப் பெரிய பாதகமாக அமைந்துள்ளது. அதுவும் படம் ஆரம்பித்ததிலிருந்து அடுத்து ஏதோ நடக்கப்போகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ற எண்ணத்திலேயே மொத்த படமும் கழிந்து விடுகிறது. இதுவே படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்து படத்தைக் கரைசேர்க்க மறுத்துள்ளது. தனுஷ், கார்த்திக் நரேன் கூட்டணியில் இப்படி ஒரு படத்தை எந்த ஒரு ரசிகரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

 

dhanush maaran movie review

 

நடிப்பில் பட்டையைக் கிளப்பி மெய்சிலிர்க்க வைக்கும் தனுஷ் இந்த படத்தில் சற்று அடக்கியே வாசித்து இருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு நடிப்பு போதுமோ அதை அளவாகச் செய்து கடந்துள்ளார். வழக்கமான ஹீரோயினாக வரும் மாளவிகா மோகனன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திச் சென்றுள்ளார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு எந்த ஒரு இடத்திலும் உதவி புரிந்ததா என்றால், இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. எங்கு மாளவிகா மோகனன் வசன உச்சரிப்பில் ஏதாவது பிழை ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் படம் முழுவதும் அவர் வாயில் ஒரு சூயிங் கம் போட்டு மென்று கொண்டே பேசும்படி அவரது கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன். இதில் மட்டுமே அவரது இன்டெலிஜன்ஸ் நன்றாகப் பளிச்சிட்டுள்ளது. 

 

கடமைக்கு வரும் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்மிருதி வெங்கட். புதிதாக எதையும் ட்ரைசெய்து ரிஸ்க் எடுக்காமல் தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான அண்ணன்-தங்கை உறவு எப்படி இருக்குமோ அதையே ஃபாலோ செய்து, வழக்கமான தங்கையாக நடித்துள்ளார். அதேபோல் வழக்கமான அரசியல்வாதியாக வரும் சமுத்திரகனி, கொடுத்த கதாபாத்திரத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கடந்துள்ளார். படத்துக்கு ஒரு ட்விஸ்ட் வேண்டுமே என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் அமீர் வந்து செல்கிறார். இவர்கள் எதிர்பார்த்த ட்விஸ்டை இந்த கதாபாத்திரம் கொடுத்ததா என்றால், இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. நடிகர் ராம்கி, ஆடுகளம் நரேன் ஆகியோர் அவரவருக்குக் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து மனதில் பதியும்படி நடித்துள்ளனர்.

 

ஜிவி பிரகாஷ் இசையில் சோகப்பாடல் ஓகே மற்ற பாடல்கள் சுமார். சில இடங்களில் மட்டும் பின்னணி இசை படத்தைத் தாங்கி பிடித்துள்ளது. விவேக் ஆனந்த் சந்தோஷம் ஒளிப்பதிவில் படம் கலர்ஃபுல்லாக தெரிகிறது. தனுஷ் மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரின் லுக்கை மிகவும் அழகாகக் காட்டியுள்ளார். 

 

கேவி ஆனந்த் பட ஸ்டைலில் ஸ்கிரீன்ப்ளேவும், கௌதம் மேனன் பட ஸ்டைலில் கதாபாத்திரங்களும், கார்த்திக் நரேன் பட ஸ்டைலில் சற்று ஸ்டைலிஷான திரில்லர் ஜானரும் கலந்து வெளியாகியுள்ள மாறன் சற்று பெரிய ஏமாற்றம் தான்.

 

மாறன் - மாத்தி யோசிச்சிருக்கலாம்!