Skip to main content

வெடித்த விவகாரம்; நடன இயக்குநர்கள் மத்தியில் வாக்குவாதம்

Published on 03/06/2025 | Edited on 03/06/2025
dance master dinesh issue

தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக டான்ஸ் மாஸ்டர் தினேஷ் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் சங்கத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வில்லை என மற்ற சங்க நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி இருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது. அந்த பல்வேறு பிரச்சனைகளில், சங்கத்தின் முன்னாள் தலைவரான மாரி என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் தனது நண்பர் என்பதால் தினேஷ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், லியோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் பாக்கி விவகாரத்தில் ரூ.35 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

இந்த பிரச்சனைகள் குறித்து கன்னடாவில் வசிக்கும் நடனக் கலைஞரான கௌரி சங்கர் என்பவர், சங்கத் தலைவரான தினேஷிடம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் கௌரி சங்கர் கடந்த மார்ச் மாதம் சென்னைக்கு வந்து சங்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது தினேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் சிலர் கௌரி சங்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஒரு சீ.சி.டி.வி. காட்சியும் வெளியானது. இதனால் தினேஷ் மீது சரியாக எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவதில்லை என்ற புகார் பெரிதாக வெடித்தது

இந்த சூழலில் சங்க துணைத் தலைவர் தலைமையில் அவசர பொதுக்குழு கூட்டம் கூட்டி அதில் தினேஷ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தைத் தலைவர் தினேஷிடம் கொடுக்க சென்ற போது, தினேஷ் தரப்பிற்கும் தீர்மானம் கொடுத்த தரப்பிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் சங்கத் துணைத் தலைவர் கல்யாண் மாஸ்டர், “சங்கத்தில் முன்னாடி இருந்தே நிறைய பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட மாரி மீது பொதுக்குழுவில் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அதில் தினேஷ் கையெழுத்து போட மாட்டேன்னு சொல்லிவிட்டார். அதோடு மாரி வீட்டில் நான் கை நினைச்சிருக்கேன்னும் காரணம் சொன்னார். இது ரொம்ப தப்பு.

இதே போல லியோ பட சம்பள விவகாரத்திலும் பொதுக்குழுவில் ஒரு நடவடிக்கை எடுத்தோம். அதிலும் தினேஷ் கையெழுத்து போடவில்லை. இதனால் ஒவ்வொரு விவகாரத்திலும் தினேஷ் கையெழுத்து போட மறுத்ததால், டான்ஸ் மாஸ்டர் கௌரி சங்கர் தினேஷை பார்த்து தலைவர் பொறுப்பில் நீ இருப்பதற்கு தகுதியற்றவர் என்று சொன்னார். அதனால் அவர் சங்கம் வந்த போது தினேஷ் உள்ளிட்ட சில நிர்வாகிகள் அவரை தனியாக அழைத்து போய் அடித்திருக்கின்றனர். அது தொடர்பான சீ.சி.டி.வி. காட்சியை பொதுக்குழுவில் காண்பித்து, தினேஷ் மீது தவறு இருப்பதை உறுதிசெய்தோம். உடனே தினேஷிடம் தகுதியான முறையில் இந்த பிரச்சனையை முடியுங்கள் என சொன்னேன். அவர் கண்டுகொள்ளவில்லை. கௌரி சங்கரும் பின்பு கனடா போய்விட்டார். அவர் போன பின்பு மீட்டிங் வைத்த போது கௌரி சங்கர் இல்லாமல் என்னை விசாரிக்கக்கூடாது என்று தினேஷ் சொல்லிவிட்டார். 

இப்போது கௌரி சங்கர் திருப்பியும் வந்தார். அதனால் உடனே மீட்டிங் வைக்க சொல்லி நான் சொன்னேன். ஆனால் தினேஷ் கௌரி சங்கர் 6ஆம் தேதி கனடா செல்லவுள்ளதால் அதை தெரிந்து கொண்டு 8ஆம் தேதி மீட்டிங் வைக்கிறார். இது என்ன நியாயம். அதனால் நான் துணைத் தலைவர் என்கிற முறையில் அவசர பொதுக்குழு கூட்டி சங்கத்தின் சட்டப்படி மெஜாரிட்டியான உறுப்பினர்களை வைத்து தினேஷ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும், அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடக்கூடாது என்று ஒரு முடிவெடுத்தோம். பின்பு தினேஷ் தனிப்பட்ட முறையில் என்னிடம் நான் பதவி விலகிக்கொள்கிறேன், மீட்டிங் நடத்த வேண்டாம் என கேட்டார். ஆனால், நான் விவகாரம் பெரிதாகிவிட்டது, பெருந்தன்மையாக மீட்டிங்கில் வந்து மன்னிப்பு கேளுங்கள் என்று சொன்னேன். ஆனால் அவர் மீட்டிங்கிற்கு வரவில்லை. அதனால் நாங்களே ஏற்கனவே முடிவெடுத்த, தீர்மானத்தை நிறைவேற்றினோம். அதை இங்கு கொடுக்க வந்தால் ரௌடிசம் பன்றாங்க. உள்ளே விட மாட்றாங்க” என்றார்.  

சார்ந்த செய்திகள்