கடந்த நவம்பர் 2ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் பின்னாலிருந்து தாக்குவது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் நடிகர் மகா காந்தி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் சமாதானம் செய்துகொண்டதால் வழக்கு ஏதும் பதியப்படவில்லை என போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நடிகர் மகா காந்தி தற்போது விஜய் சேதுபதி மற்றும் அவர் மேலாளர் ஜான்சன் மீதும் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், ‘நான் கடந்த நவம்பர் 2ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்றபோது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது அவரை பார்த்து பேசிவிட்டு வாழ்த்து கூறினேன். அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி தவறான வார்த்தையில் திட்டியதுடன் தன்னுடைய சாதியைக் குறிப்பிட்டு பேசி’யதாகக் கூறியுள்ளார். மேலும், விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன்னைத் தாக்கியதாகக் கூறிய மகா காந்தி, அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.