பிரபல பாஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது ‘போத்தனூர் தபால் நிலையம்’ என்ற படத்தை தயாரித்துவருகிறது. ஏற்கனவே இந்நிறுவனம் தயாரித்திருந்த ‘சீதக்காதி’, ‘அந்தகாரம்’, ‘என்னங்க சார் உங்க சட்டம்’ ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் இயக்கும் 'போத்தனூர் தபால் நிலையம்' படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் இயக்குநர் பிரவீன் கதாநாயகனாகவும் நடிக்கிறார். சில ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள பிரவீன், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கோச்சடையான்' படத்தில் தொழில்நுட்ப இயக்குநராக பணியாற்றியுள்ளார். 'போத்தனூர் தபால் நிலையம்' படத்தில் கதாநாயகியாக அஞ்சலி ராவ் நடிக்கிறார். மூன்று பாகங்கள் கொண்ட கதைகள் இணையும் சஸ்பென்ஸ் கிரைம் தில்லராக இப்படம் உருவாகவுள்ளது.
இப்படத்தின் முதல் பாகம் 90களில் தபால் நிலையம் பின்னணியில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துள்ளதால் விரைவில் படத்தின் முதல் பாகத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்திய திரையுலகில் முதல்முறையாக தபால் நிலைய பின்னணியில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.