கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூன் 31ஆம் தேதி வெளியான படம் தெலுங்கு படம் ‘கிங்டம்’. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கைத் தாண்டி தமிழ் மற்றும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியது.
இப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தில் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனம் தெரிவித்து படம் திரையிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்தார். மேலும் அப்படி திரையிட நிறுத்த தவறும்பட்சத்தில், திரையரங்குகளை முற்றுகையிட்டு, படத்தைத் தடுத்து நிறுத்துவோமெனவும் எச்சரித்திருந்தார். அதன் படி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதில் ராமநாதபுரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் திரையரங்க வளாகத்தில் இருந்த கிங்டம் பட பேனரை கிழித்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதனிடையே படம் திரையிடப்பட்டு வரும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய எஸ்.எஸ்.ஐ. புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தொடரப்பட்டது. அந்த மனுவில் ஈழத் தமிழர்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படம் எடுக்கப்படவில்லை என்றும் படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனு விசாரணைக்க வந்த போது, சென்சார் போர்டு அனுமதித்த ஒரு திரைப்படத்தை வேறு எந்த வகையிலும் தடுக்க முடியாது என்றும் எந்த போராட்டமாக இருந்தாலும் ஜனநாயக ரீதியில் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்து மனு குறித்து காவல்துறையும் நாம் தமிழர் கட்சியினரும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்று ஒத்திவைத்தது.
அதன்படி இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, படம் திரையிட இடையூறு விளைவிக்கப்பட்டால் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார். இதனிடையே பிரச்சனைக்குரிய இடங்களில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் படம் திரையிடுவதை எந்த வகையிலும் தடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.