vgdvdvd

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், கமல் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தை ஷங்கர் இயக்கிவருகிறார். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு பாதியில் தடைப்பட்டது. தற்போது அரசியல் பணிகளில் கவனம் செலுத்திவரும் கமல்ஹாசன், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் ஷங்கரும் அடுத்தாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தையும், ரன்வீர் சிங்குடன் ‘அந்நியன்’ ஹிந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன.

Advertisment

இந்த நிலையில், ‘இந்தியன் 2’ விவகாரம் தொடர்பாக லைகா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில், தங்கள் படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்குமாறு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஷங்கர் தரப்பில் தாமதத்திற்கான விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததையடுத்து, இந்தப் பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், லைகா நிறுவனம், இயக்குநர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்குத் தீர்வு காண, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

இதன்மூலம் 'இந்தியன் 2' படப் பிரச்சனைக்கு விரைவில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலையில் 'இந்தியன் 2' பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று (03.07.2021) தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் லைகா நிறுவனத்திற்கும், இயக்குநர் ஷங்கருக்கும் இடையேயான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.