ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் மற்றும் ஒரு குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்ததால் படத்திற்கு மாஸ் ஓபனிங் கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
கலவையான விமர்சனங்கள் பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.151 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் நான்கு நாட்களில் ரூ.404 கோடிக்கும் மேல் வசூலித்ததாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இப்படம் ஏ சான்றிதழுடன் வெளியாகியிருந்தது. இதனால் வசூல் பாதிப்பதாக கூறப்படுகிறது அதனால் யு/ஏ சான்றிதழுடன் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் எனத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், சென்னை உயர்நீதி மன்றத்தில் கோரிக்கை மனு கொடுத்தது. இதில் கூலி படத்தை விட அதிக வன்முறை இருந்த கே.ஜி.எஃப். மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த மனுவின் விசாரணை இன்று வந்துள்ளது. அப்போது மனு தொடர்பக சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவிட்டு மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனிடையே சிங்கப்பூரில் கூலி திரைப்படத்தை மறு தணிக்கை செய்யப்பட்டு 4 நிமிட காட்சிகளும் நீக்கப்பட்டு அனைவரும் பார்க்கும்படி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.