ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் மற்றும் ஒரு குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்ததால் படத்திற்கு மாஸ் ஓபனிங் கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
கலவையான விமர்சனங்கள் பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக பெறும் வரவேற்பை பெற்று முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.151 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் நான்கு நாட்களில் ரூ.404 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இப்படம் ஏ சான்றிதழுடன் வெளியாகியிருந்தது. இதனால் குழந்தைகள் மற்றும் 18 வயது கீழுள்ளவர்கள் திரைப்படம் பார்க்க முடியாத சூழல் நிலவியது. இதனால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூலி படத்தை விட அதிக வன்முறை இருந்த கே.ஜி.எஃப். மற்றும் பீஸ்ட் படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாகக் மேற்கோள் காட்டி, சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோசமான காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் மது காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சென்சார் போர்டு தெரிவித்த அனைத்து நிபந்தனைகளும் கடைபிடிக்கப்பட்டதால், யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சென்சார் போர்டு தரப்பில் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்க அனைத்து குழுக்களும் சேர்ந்து ஒரு மனதாக முடிவெடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த மனுவை நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.